ஆண்டுக்கு ரூ.23 ஆயிரம் கோடிக்கு மேல் லஞ்சம் ....ஆர்.டி.ஓ. அலுவலம் குறித்த ஆய்வில் அதிர்ச்சி தகவல்
வட்டார போக்குவரத்து அதிகாரிகள் (ஆர்.டி.ஓ.) அலுவலகங்களில் ஒரு ஆண்டில் மட்டும் ரூ.23 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக லஞ்சம் வாங்கவதாக, ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மசோதாவுக்கு ஒப்புதல்
மோட்டார் வாகனங்கள் சட்டம் (திருத்த) மசோதாவை மாநிலங்களவை உறுப்பினர்கள் 24 பேர் அடங்கிய தேர்வுக் குழு ஆய்வு செய்தது. பின்னர், அந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு அந்தக் குழு ஒப்புதல் அளித்தது.
எனினும், சில யோசனைகளையும் அந்தக் குழு முன்வைத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
ரூ.23 ஆயிரம் கோடி
லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் ஆகியோரிடம் இருந்து ஓராண்டில் மட்டும் நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பெறும் லஞ்சத் தொகை ரூ.10 ஆயிரம் கோடி வரை இருப்பதாக ஆய்வு ஒன்றில் வெளியான தகவல் அதிர்ச்சியை அளிக்கிறது.
ஓட்டுனர் உரிமங்கள், வாகனப் பதிவு, வரி செலுத்துதல், வாகனம் செல்வதற்கான அனுமதி ஆகியவற்றுக்காக வாங்கப்படும் லஞ்சத்தையும் சேர்த்தால் ஆண்டுக்கு சுமார் ரூ.23ஆயிரம் கோடி வரை ஆர்டிஓ அலுவலங்களில் ஊழல் நடைபெறுவதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீருடையில் கேமராக்கள்
வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ஊழல் மலிந்து வருகிறது. ஊழலைக் கட்டுப்படுத்துவதற்காக போக்குவரத்துக் காவலர்களுக்கும், வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் சீருடையில் கேமரா பொருத்தலாம்.
அதன் மூலம், பணி நேரத்தில் இருக்கும்போது பதிவாகும் காட்சிகளை கட்டுப்பாட்டு அறைகள் மூலம் கண்காணிக்கலாம். இதன்மூலம், ஊழலைக் கட்டுப்படுத்த முடியும்.
வினியோகஸ்தர்களிடம்
மேலும், வாகனங்களைப் பதிவு செய்யும் பணிகளை விநியோகஸ்தர்களிடம் கொடுக்கலாம். ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்த நடைமுறை ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டுள்ளது. விநியோகஸ்தர்கள் ஏதேனும் ஊழல் செய்ய முயன்றால் அதிக அபராதம் விதிக்கலாம்.
அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் வாகனத்தை இயக்குவதற்கான சான்றிதழைப் பெற்றாலே போதுமானது. அவர்கள் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி முன் மீண்டும் வாகனத்தை இயக்கிக் காட்ட வேண்டாம்’’ என்று அந்தக் குழு யோசனை தெரிவித்துள்ளது.