வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய் போடறதா அவரு சொல்லல... அதெல்லாம் சுத்தப் பொய்... பிஜேபி MP அந்தர் பல்டி!
பொதுமக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய் செலுத்தப்படும் என்று பாரதப் பிரதமர் மோடி ஒருபோதும் கூறியதில்லை என்று பிஜேபி மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
மகராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த பிஜேபி மாநிலங்களவை உறுப்பினரான அமர் சாபல், பிஜேபியின் 4 ஆண்டு சாதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசும் போது பொதுமக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய் செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி ஒருபோதும் கூறியதில்லை, எங்களது தேர்தல் அறிக்கையிலும் அப்படி ஒரு வாக்குறுதி இல்லை என்று கூறினார்.
மக்களின் வங்கிக்கணக்கில் 15 லட்ச ரூபாய் செலுத்தப்படும் என்று பிரதமர் கூறியதாக எதிர் கட்சிகள் பொய்யான தகவலை மக்களிடத்தில் பரப்பி வருகின்றனர் என்றும், இதன் மூலம் தவறான தகவலை அளித்து மக்களின் எண்ணத்தில் குழப்பத்தை அவர்கள் ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் கூறினார்.
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை கடிந்துகொண்ட எம்.பி அமர் சாபல், கடந்த தேர்தலில் பிஜேபி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பொதுமக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய் செலுத்தப்படும் என்ற ஒரு தகவல் இடம்பெறவில்லை என்பதை கவனிக்க வேண்டும் என கூறினார்.
பிஜேபி எம்.பி இப்படி அந்தர் பல்டி அடித்துள்ளதை அடுத்து, 2014 தேர்தல் பரப்புரையின் போது நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் செலுத்துவதாக பிரதமர் மோடி சொன்னதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் உலா வருவது குறிப்பிடத்தக்கது.