குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகே லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகர் அருகே சோக்காடா கிராமம் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து 2௦க்கும் மேற்பட்டோர் குஜராத்தில் உள்ள அம்பாஜி கோயிலுக்கு செல்வதற்காக ஒரு தனியார் வேனில் சென்றுள்ளனர்.

கோயிலில் தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது, பகோடாரா நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, இன்று அதிகாலை எதிரே வேகமாக வந்த ஒரு லாரி வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிருந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.