1000 கிலோ கிச்சடி... அசராம கிண்டிய பாபா ராம்தேவ்... உலக சாதனை படைச்சிட்டாங்க...
தில்லியில் சர்வதேச இந்திய உணவுத்துறை மாநாடு சனிக்கிழமை இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டின் முக்கிய அம்சமே, கிச்சடிதான். ஏற்கெனவே தேசிய உணவு கிச்சடி என்ற வகையில் இரு தினங்களாகப் பரப்பப் பட்டு வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, வெறுமனே இந்த உணவுத் திருவிழாவில் கிச்சடி கிண்டுவதுதான் விஷயம் என்று சுமுகமாக பிரச்னையை முடித்துவைத்தார் உணவுத் துறை அமைச்சர் ஹர்சிம்ராத் கவுர் பாதல்.
இன்று நடைபெற்ற உணவுத் துறை மாநாடு திருவிழாவில், பதஞ்சலி நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம்தேவ், பிரபல சமையல் கலைஞர்கள் இமிதியாஸ் குரேஷி, ரன்பீர் ப்ரார் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவின் முக்கிய அம்சமாக, சுமார் 1000 கிலோ கிச்சடி கிண்டப்பட்டது. பாபா ராம்தேவ் சுவை பார்த்தார். இந்த நிகழ்வின் மூலம், கிச்சடி கிண்டி, உலக சாதனை படைக்கப்பட்டது. இந்தக் கிச்சடி பின்னர் தில்லியில் உள்ள 10 ஆயிரம் ஏழைகளுக்கு வழங்கப்பட்டது.
இதற்காக 25 கிலோ நெய், 1 கிலோ மஞ்சள், 500 கிராம் கிராம்பு என இவை எல்லாம் பாபா ராம்தேவின் பதஞ்சலி சார்பில் வழங்கப்பட்டது.
மத்திய உணவு அமைச்சகம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் சமையல் கலைஞர் சஞ்சீவ் கபூர் கிச்சடியை சமைத்தார். கிச்சடி பெரிய அளவில் புகழ்பெற்றது இல்லை என்றாலும் அது சிறந்த சத்துக்களைக் கொண்டது என்றும் நாடு முழுவதும் இருந்து எடுத்துவரப்பட்ட சத்தான தானியங்களால் இந்தக் கிச்சடி சமைக்கப்பட்டது என்றும் கூறினார், மத்திய உணவுத்துறை அமைச்சர் ஹர்சிம்ராத் கவுர் பாதல்.
உலக அரங்கில், உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துவிட்டதாகவும், இதனால் கிச்சடி சமைக்கப்பட்டது, உருவானது, உணவளிக்கப்பட்டது என பல வகையில் இந்நிகழ்வு உலக சாதனை படைத்துவிட்டது என்றும் கூறினார் பதஞ்சலி நிறுவுனர் பாபா ராம்தேவ்.
தேசிய உணவு என்ற சர்ச்சையைக் கடந்து கிச்சடி என்ற உப்புமா இப்போது உலக சாதனை படைக்கப்பட்ட ஒரு நிகழ்வின் பிரதானப் பொருள் ஆகிவிட்டது.