10 years jail for drunk and drive
குடித்துவிட்டு பைக், கார் ஓட்டி போலீசிடம் பிடிபட்டால் ரூ.10 ஆயிரம் அபராதமும், விபத்து ஏற்படுத்தி உயிர்பலி ஏற்பட்டால், ஜாமினில் வெளிவரமுடியாத வழக்குப்பதிவும், 10 ஆண்டு சிறையும் விதிக்க மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் இந்த அறிக்கை, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் அனுப்பப்பட்டு, இதுபோன்ற குற்றங்களை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால்தான் விபத்து ஏற்படுகிறது. அவ்வாறு விபத்து ஏற்படுத்தினால், கவனக்குறைவு என்ற ரீதியில் அபராத்துடன் விட்டுவிடாமல், இந்திய குற்றவியல் சட்டம் 299 பிரிவின்படி, உள்நோக்கத்துடன், தெரிந்த குற்றம் செய்தார் என்ற பிரிவில் அவரை கைது செய்து அதிகபட்சமாக 10 ஆண்டு சிறைவிதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில முக்கியமான பரிந்துரைகளையும் அளித்துள்ளளது. அவை
- வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல், மாணவர்கள் பைக், கார் ஓட்டி பிடிபட்டால், அந்த வாகனத்தின் உரிமம்,பதிவு உடனடியாக ரத்து செய்யப்படும். விபத்து ஏதேனும் நேரிட்டால், பாதிக்கப்பட்டவருக்கு முதல்கட்டமாக ரூ.25 ஆயிரம் வழங்கவேண்டும்.
- குழந்தைகளை பைக்கில் உடன் அழைத்துச் செல்லும் போது, அவர்களுக்கு அணிவிக்கும் ஹெல்மட் தரம் குறித்து சோதித்து பார்க்க வேண்டும்.

- இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணியாமல் சென்று பிடிபட்டால் ரூ.ஆயிரம் அபராதமும், 3 மாதங்களுக்கு லைசன்ஸ் உரிமம் ரத்துசெய்யப்படும்.
- மேலும், சிக்னலில் சிவப்பு விளக்கை மீறிச் செல்பவர்கள், காரில் சீட் பெல்ட் அணியாதவர்களுக்கும் ரூ. ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
- இருசக்கர வாகனம், கார் ஓட்டும் போது செல்போனில் பேசிக்கொண்டே ஓட்டினால், ரூ. ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம்
இந்த பரிந்துரைகள் விரைவில் அமலக்கு வரும் என மத்தியஅரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
