நவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற கர்பா நடன நிகழ்ச்சிகளில் பலர் பலியானதை அடுத்து குஜராத் மாநில அரசு சிறப்பு கவனத்துடன் கர்பா நிகழ்ச்சிகளை நடத்த அறிவுறுத்தியுள்ளது.

குஜராத்தில் கடந்த 24 மணிநேரத்தில் நவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற கர்பா நடன நிகழ்ச்சியின்போது குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வெள்ளிக்கிழமை, பரோடாவின் தபோயை சேர்ந்த 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். அகமதாபாத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் கர்பா ஆட்டத்தின்போது திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். இதேபோல், கபத்வாஞ்ச் பகுதியைச் சேர்ந்த 17 இளைஞரும் சிறுவனும் கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்தபோது உயிரிழந்தார்.

நவராத்திரியின் முதல் ஆறு நாட்களில், 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவைக்கு இதயம் தொடர்பான பிரச்னைகளுக்காக 521 அழைப்புகளும், மூச்சுத் திணறலுக்காக கூடுதலாக 609 அழைப்புகளும் வந்துள்ளன. வழக்கமாக கர்பா கொண்டாட்டங்கள் நடைபெறும் மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரையான நேரத்தில் இந்த அவசர உதவிக்கான அழைப்புகள் வந்துள்ளன.

இதனால், குஜராத் மாநில அரசு சிறப்பு கவனத்துடன் கர்பா நிகழ்ச்சிகளை நடத்த கேட்டுக்கொண்டிருக்கிறது. கர்பா நிகழ்ச்சி நடக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் முன்னெச்சரிக்கையுடன் சிகிச்சைக்குத் தயாராக இருக்கும்படி மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ்கள் விரைவாக நுழைவதற்கான வசதியை உருவாக்கவும் கர்பா நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தங்கள் ஊழியர்களுக்கு CPR பயிற்சி அளிக்கவும், பங்கேற்பாளர்களுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யவும் மாநில அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களை நிறுத்தி பங்கேற்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கர்பா அமைப்பாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த ஆண்டு நர்வராத்திரி பண்டிகைக்கு முன்னதாக, குஜராத்தில் கர்பா பயிற்சியின் போது மூன்று பேர் மாரடைப்பால் இறந்தது குறிப்பிடத்தக்கது.