கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மனுதாரர் 6 வார காலத்துக்குள் அபராத பணத்தை செலுத்தாவிட்டால், அவரின் சொத்துக்களை விற்று அந்த பணத்தை நீதிமன்றத்தில் செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மனுதாரர் 6 வார காலத்துக்குள் அபராத பணத்தை செலுத்தாவிட்டால், அவரின் சொத்துக்களை விற்று அந்த பணத்தை நீதிமன்றத்தில் செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பிரதமரின் புகைப்படத்தை நீக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கூட காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்தது. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது உரிமை மீறிய செயல் என்று கேரளாவைச் சேர்ந்த தகவல் பெறும் உரிமை ஆர்வலரான பீட்டர் மயிலிபரம்பில் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த 14ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், மற்ற நாடுகளில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் அந்தந்த பிரதமர்களின் புகைப்படங்களை அச்சிடுவதில்லை என தெரிவித்தார்.

அவர்களெல்லாம் தங்கள் பிரதமரை நினைத்து பெருமைப்படாமல் இருக்கலாம் என நீதிபதி பதில் தந்தார். அதை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக பேசிய கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பிவி குன்னி கிருஷ்ணன், கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்க வேண்டும் என்ற இந்த வழக்கு அரசியல், விளம்பர நோக்கத்திற்காக அற்பமான முறையில் தொடரப்பட்டுள்ளது. நீதிமன்ற நேரத்தை வீணாக்கியதற்காக மனுதாரர் பீட்டர் மயலிபரம்பில் 6 வாரத்திற்குள் ரூ. 1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த தவறும் பட்சத்தில் வருவாய் மீட்பு நடவடிக்கைகள் மூலம் அவரது சொத்துக்களில் இருந்து அபராதத்தை வசூலித்துக்கொள்ளலாம். இந்த நாட்டின் குடிமகன் ஒருவரிடம் இருந்து இதுபோன்ற ஒரு மனுவை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆயிரக்கணக்கில் குற்ற வழக்குகள், சிவில் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது இந்த வழக்கு நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடித்துள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் பிரதமர் என்பவர் நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும், அவருடைய படத்தை சான்றிதழில் அச்சிடுவதில் என்ன தவறு இருக்கிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆனால், பிற நாடுகளில் எந்த பிரதமரின் புகைப்படமும் இடம்பெறவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதற்கு பதிலளித்த நீதிபதிகள், அவர்களெல்லாம் நமது பிரதமரை பற்றி பெருமைப்படாமல் இருக்கலாம் என்று பதிலளித்ததோடு, யாரும் ஆட்சேபம் தெரிவிக்காத போது உங்களுக்கு மட்டும் என்ன பிரச்னை என்றும், இந்த வழக்கை ஏற்பதற்கு ஏதேனும் முகாந்திரம் உள்ளதா என்பதை பார்த்து முடிவு செய்யப்படும் என்று கூறினர். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன், உள்நோக்கத்துடன் இந்த மனுவை தாக்கல் செய்த மனுதாரருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் தெரிவித்தார். மனுதாரர் 6 வார காலத்துக்குள் அபராத பணத்தை செலுத்தாவிட்டால், அவரின் சொத்துக்களை விற்று அந்த பணத்தை நீதிமன்றத்தில் செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.