Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். எல்லோருக்கும் பிடித்த மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை. 100கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏயும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின்சியும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பெரும்பாலான மக்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்து விடுவார்கள்.

மாம்பழத்தின் மேல் தோல்பகுதியில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது. வெண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதை நாம் அறிவோம். இதேபோன்றே மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதால் விலை கூடுதலான வெண்ணெயை உண்பதை விட விலை மலிவான மாம்பழத்தை உண்ணலாம் என்கின்றனர் மருத்துவர்கள். 

நாம் சாப்பிடாமல் தூக்கி எறியும் மாங்கொட்டையிலும் கால்சியசத்தும், கொழுப்புசத்தும் இருக்கின்றது. மாம்பழத்தின் பூர்வீகம் இந்தியா தான். இப்போதும் அதிகமாக இங்கு தான் மாம்பழம் உற்பத்தி ஆகிறது. உத்திரப்பிரதேசத்தில் சப்போட்டா, துஷேரி போன்ற வகையான மாம்பழங்களும், தென்னிந்தியாவில் அல்போன்சா, பங்கனப் பள்ளி, ராஸ்புரி, நீலம், ஒட்டு, மல்கோவா, கிளி மூக்கு என்று பல்வேறு வகையான மாம்பழங்கள் கிடைக்கின்றது. அதிகமாக சாறும், நாரும் உள்ள பழங்களில் இருந்து பழச்சாறு, ஒரு வகை சட்னி, பழஊறுகாய், ஜாம் ஆகியவை தயாரிக்கப்படுகிறது.

தினமும் மாம்பழம் உண்பதன் மூலம் மாலைக்கண் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி பல் குறித்த நோய்கள், மேனியில் சுருக்கங்கள் நீங்க வாய்ப்பு உள்ளது. ரத்த விருத்தி உண்டாகும். கனியாத பழங்களை சாப்பிட்டால் கண் கோளாறு, மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பழுத்த பழமே சாப்பிட வேண்டும். உடல் உஷ்ணம் உள்ளவர்கள் அதிகம் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

மனிதர்களுக்கு தினசரி 5 ஆயிரம் யூனிட்டு வைட்டமின் தேவை. மாம்பழம் அத்தேவையை நிறைவு செய்கிறது. இருதயம் வலிமை பெறும். பசி தூண்டுதல், உடல் தோல் நிறம் வளமை பெறுகிறது. முகத்தில் பொலிவு உண்டாகும். கல்லீரல் குறைபாடுகள் விலகும். புது ரத்தஅணுக்கள் உற்பத்தியாகும். உடல் வளர்ச்சி பெறுகிறது. இயற்கையான முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் மட்டுமே சாப்பிடவேண்டும். செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் உடலுக்கு கெடுதலை உண்டாக்கும்.