பேரீச்சைப் பழம்
100 கிராம் பேரீச்சையில் 277 கலோரிகள் உள்ளன; 0.90 மி.கி இரும்புச்சத்து இருக்கிறது. இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியும் இதில் அதிகமாகக் கிடைக்கும்.
வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்த இந்தப் பழம் நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.
கால்சியம் சிறிதளவு இருப்பதால் எலும்பு, பற்களுக்கு நல்லது.
நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், மலச்சிக்கல் பிரச்னை தீரும். ஏகப்பட்ட சத்துகள் நிறைந்துள்ள இந்தப் பழம் ஒரு வரம்.
மாதுளைப் பழம்
குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பிச் சாப்பிடும் பழங்களில் ஒன்று, மாதுளை. நார்ச்சத்து நிறைந்தது. 100 கிராம் பழத்தில், 0.30 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கிறது. ஆக்சிஜன் ரேடிக்கலை உறிஞ்சும் திறன் இதில் அதிகம். மாதுளம்பழச் சாற்றில் தேன் கலந்து தினமும் காலை உணவுக்குப் பின்னர் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும்.
மாதுளையைத் தொடர்ந்து சாப்பிட்டால், மனஅழுத்தத்தில் இருந்து விடுபடலாம். தோல் சுருக்கத்துக்குக் காரணமான செல்களின் டிஎன்ஏ-க்களை மாற்றி, புத்துணர்ச்சியாக வைத்திருக்கவும் இது உதவுகிறது. இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், பாலியல் தொடர்பான நோய்களுக்கு இது அருமருந்து.
தர்பூசணி
தர்பூசணி புத்துணர்ச்சி, தரும் பழம் மட்டுமல்ல… வெயில் காலத்துக்கு ஏற்றதும்; உடல்நலத்துக்குச் சிறந்ததும் கூட. இது, உடலில் உள்ள வெப்பத்தையும் ரத்தஅழுத்தத்தையும் சரிசெய்யும்.
வைட்டமின் ஏ, தாதுக்கள், நார்ச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளன. 100 கிராம் தர்பூசணியில் 90 சதவிகிதம் தண்ணீர், 7 சதவிகிதம் கார்போஹைட்ரேட், 0.24 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளன.
இதில் உள்ள லைகோபீன் என்ற சத்து சூரிய ஒளியிலிருந்து வரும் புறஊதாக் கதிர் வீச்சில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.
அத்திப்பழம்
ஜீரண சக்திக்கு உதவுவது அத்திப்பழம். நமக்குப் புத்துணர்ச்சியை தந்து நுரையீரலிலுள்ள அடைப்புகளை நீக்கும்.
தோல் தொடர்பான பிரச்னைகள் நீங்கும். இதில் கால்சியம் அதிகமாக இருக்கிறது. 100 கிராம் அத்திப்பழத்தில் இரண்டு மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது.
இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். இதில் உள்ள க்ளோரோஜெனிக் (chlorogenic) அமிலம் உடலில் உள்ள இன்சுலினை அதிகரிக்கச் செய்து, சர்க்கரையைக் குறைக்கும்.
நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால், மலச்சிக்கல் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். ரத்தப்போக்கைக் கட்டுபடுத்தும் வல்லமைகொண்டது.
