பண்ணைக்கீரை சாப்பிட்டதுண்டா? சகல சத்துகளும் நிறைந்த கீரை வேண்டுமானால் கதிர் அறுத்த வயற்காடுக்குத்தான் போக வேண்டும். விவசாய வேலைக்குப் போன பெண்கள் வீடு திரும்பும்போது, கண்ணில்படும் இளம்தும்பை, குப்பைமேனி, பசலி, பொன்னாங்கண்ணி, குதிரைவாலி, முடக்கத்தான், நுனிப் பிரண்டை என சகல பச்சைகளும் பறித்து சேலை முந்தானையில் கட்டி வருவார்கள். இதுதான் பண்ணைக்கீரை. அடிநுனியை அகற்றிவிட்டு பொரியலோ, துவட்டலோ செய்தால் சைடிஷ் ரெடி. சுவை மட்டுமல்ல... பலனும் பல!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நகரங்களில் சாக்கடைக் கால்வாய்களுக்கு நடுவில் வீடுகள் இருக்கின்றன. கிராமங்களிலோ சத்துணவுகளுக்கு நடுவில்தான் வீடுகள் இருக்கும். வீட்டுக்கு வேலியாக முள்முருங்கை மரம். கண்வலிக்காரர்கள் இம்மரத்தின் பூக்களைப் பார்த்தால் நோய் போய் விடும் என்பார்கள். சோயா போல இருக்கும் இதன் கொட்டையை உரசிவிட்டு உடலில் வைத்தால் கொப்புளித்து விடும். ‘சூடுகொட்டை’ என்பார்கள். கிராமத்துப் பிள்ளைகளின் விளையாட்டுகளில் சூடுகொட்டை விளையாட்டும் ஒன்று.

தெருக்கூத்தில் அணிகலன்கள் செய்வதற்கு இம்மரத்தின் கட்டையைத்தான் பயன்படுத்துவார்கள். எடை குறைவென்பதால் உடுத்திக்கொண்டு களமாட ஏதுவாக இருக்கும். இம்மரத்தின் இலையோடு அரிசி சேர்த்து அரைத்து தோசை வார்ப்பார்கள். நெஞ்சிலிருக்கும் சளியை முறித்து தள்ளிவிடும். மதுரை கூடழலகர் தெருவில் முள்முருங்கை வடை சாப்பிடலாம். முள்முருங்கை இலையோடு சித்தரத்தை, மிளகு, பச்சரிசி கலந்து செய்கிறார்கள்.