உடல் ஒல்லியாக வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகாலையில் எழுந்திருங்கள். அப்படி அதிகாலையில் விழித்து விடுபவர்கள் ஒல்லியாவதுடன் மகிழ்ச்சியாகவும், நல்ல உடல்நலத்துடன் இருப்பார்கள் என்று இலண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இலண்டனில் உள்ள பிரபல பல்கலைக்கழகம் ரோஹாம்டன் பல்கலைக்கழகம். இதில் ஆராய்ச்சிப் பிரிவில் உள்ள பேராசிரியர்கள், அதிகாலையில் படுக்கையில் இருந்து எழுபவர்களை பற்றி ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், காலை யில் வெகு நேரம் கழித்து எழுபவர்களை விட அதிகாலையில் எழுபவர்கள் சுறுசுறுப்பாக இயங்குவதையும் மனதில் உற்சாகத்துடன் காணப்படுவதையும் உணர்ந்தனர்.

ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் 1068 பேரிடம் அவர்களின் தூக்கம், விழிப்பு பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பி பதில் பெற்றனர்.

அவர்களில் ஒரு பிரிவினர் சராசரியாக காலை 7 மணிக்குள் விழித்து விடுபவர்கள். இன்னொரு பிரிவினர் 9 மணிக்கு பின் எழுபவர்கள்.

இவர்களின் உடல் நலம், செயல்பாடுகள், தோற்றம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்தனர்.

அதில் அதிகாலையில் விழித்து விடுபவர்கள் பெரும்பாலும் ஒல்லியாக காட்சியளித்தனர். அவர்களிடம் காலையில் வேலையை துவங்கும் போது காணப்படும் உற்சாகம் வெகு நேரம் நீடித்தது. அதே சமயம், தாமதமாக எழுபவர்களிடம் உற்சாகம் குறைந்து காணப்பட்டது.

அதே போல், இரவில் அதிகமாக டி.வி. பார்ப்பவர்களே காலையில் தாமதமாக விழிக்கிறார்கள் என்பதும், அவர்களில் பலரும் காலை உணவை தவிர்த்து விடுகின்றனர் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டது.