உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவு வகைகளை உண்ண வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது.
உணவினை உட்கொள்ளும் போது அவை சரியான முறையில் ஜீரணம் ஆக வேண்டும். இதற்கு கனமான பொருட்களை அரைவயிறு அளவுக்கும், இலகுவான பொருட்களை சற்று அதிகமாகவும் சாப்பிடலாம் என ஆயுர்வேதம் கூறுகிறது.
அளவுக்கு மீறிய உணவு சாப்பிட்டால் பல்வேறு தோஷங்களும், பிரச்சினைகளும், வயிற்று உபாதைகளும் ஏற்படும்.
அஜீரண நோய் உள்ளவர்கள் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டால் மருந்து சாப்பிடாமல் பட்டினி இருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக கூறுப்படுகிறது.
அஜீரணத்தால் மலம், சிறுநீர் தடை, குடல்வாட்டம், அபான வாயு தடை, வயிற்று பொருமல் போன்றவையும் ஏற்படும்.
கோபம், மனத்துயரம் போன்றவற்றால் ஒருவரின் உடலில் செரிக்கும் தன்மை பாதிக்கப்படுகிறது.
பத்தியமான உணவுடன், பத்தியமில்லாத உணவை சேர்த்து சாப்பிடுவது ஆயுர்வேதத்தில் சமாசனம் என்று கூறப்படுகிறது.
உணவை சாப்பிட்ட உடன் மறுபடியும் சாப்பிடுவது அத்யசனம் என்று குறிப்பிடுகிறார்கள்.
அகால நேரத்தில் அதிக அளவு அல்லது குறைந்த அளவு சாப்பிடுவதை விஷமாசனம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
இந்த மூன்றுமே கொடியவை என்றும் நோயை உருவாக்க கூடியது என்றும் ஆயுர்வேதம் தெளிவுப் படுத்துகிறது.
ஆரோக்கியமாக வாழ விரும்புபவர்கள் சம்பா அரிசி, கோதுமை, ரவை, அறுபதாம் குருவை, ஆட்டு இறைச்சி, அரைக்கீரை, முள்ளங்கி, நெல்லிக்காய், திராட்சை, புடலங்காய், வெல்லம், சிறுபயறு, சுத்தமான நீர், பால், நெய், மாதுளம்பழம், இந்துப்பு போன்றவற்றை சாப்பிட்டு வரலாம்.
வாழைப்பழம், பலாப்பழம், மோதகம் முதலியவற்றை முதலில் சாப்பிட வேண்டும். புளிப்பானவற்றை நடுவில் சாப்பிட வேண்டும். கசப்பாக உள்ளதை கடைசியில் சாப்பிட வேண்டும்.
இரைப்பையில் பாதி அளவு திட உணவும், கால் பாகம் திரவ உணவும் எடுத்துக்கொள்ள வேண்டும். எஞ்சிய கால் பாகத்தை வாயுவுக்கும், அதன் அசைவுக்கும் விட்டு விட வேண்டும்.
உணவை சாப்பிட்டால் மட்டும் போதாது. உடலுக்கு அசைவு கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். உடலுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். உணவை நன்றாக மென்று தின்ன வேண்டும்.
வெள்ளை தானியங்கள், வெள்ளை மைதா, வெள்ளை அரிசி, சீனி போன்றவை மோசமான மாவு பொருட்களாக கருதப்படுகிறது. இவை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை திடீரென கூட்டி நீரழிவு நோய் உருவாக காரணமாக அமைகிறது. எனவே வெள்ளை சீனியை அறவே தவிர்ப்பது உடலுக்கு நல்லது.
பதப்படுத்தப்பட்ட உப்பு சேர்த்த வறண்ட உணவான பிஸ்கட் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
தானியங்களை உடைத்து தவிடு நீக்காமல் முழு தானியங்களை பயன்படுத்துவது மிகவும் சிறந்ததாகும். நார்ச்சத்து உள்ள உணவு வகைகளை தாராளமாக பயன்படுத்த வேண்டும்.
எப்போதும் வழக்கமான உணவையே உண்ண வேண்டும். சுத்தமான உணவை உரிய நேரத்தில் உண்ண வேண்டும்.
உணவை உட்கொள்பவர்களும், அதனை கொடுப்பவர்களும் சுத்தமாக இருக்க வேண்டும். உணவில் சற்று திரவமும் இருக்க வேண்டும்.
கெட்டுபோன உணவு அதிகமாக உப்பு சேர்த்த உணவுகளை சாப்பிட கூடாது.
இரவில் தயிர் சேர்த்து உண்ண கூடாது.
சாப்பிடும் போது மனம் இயல்பாக இருக்க வேண்டும். பரபரப்பாக இருப்பதை தவிர்க்க வேண்டும்.
