மீண்டும் ராணுவ ரகசியம் கசிவு; சிக்னல் குரூப் மூலம் பரப்பிய அமெரிக்க அதிகாரி!
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் ஏமனில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகள் குறித்த ரகசிய விவரங்களைக் கசியவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிக்னல் ஆப் மூலம் தனது மனைவி, சகோதரர் மற்றும் தனிப்பட்ட வழக்கறிஞருடன் ரகசியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

US Defence Secretary Pete Hegseth
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் ஏமனில் அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்த ரகசிய விவரங்களைக் கசியவிட்டதாக தி நியூயார்க் டைம்ஸ் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. சிக்னல் ஆப் மூலம் ரகசியத் தகவல்களை தனது மனைவி, சகோதரர் மற்றும் தனிப்பட்ட வழக்கறிஞருடன் அவர் பகிர்ந்துகொண்டார் என்றும் கூறப்படுகிறது.
மார்ச் 15ஆம் தேதி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்கள் பற்றிய தகவல் கசிவு இரண்டாவது முறையாக நடந்திருப்பதால், இந்தச் சம்பவம் அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்டகனுக்கு புதிய சிக்கலாக மாறியுள்ளது.
ஹெக்செத் பாதுகாப்பு செயலாளராக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பு, ஜனவரி மாதமே சிக்னல் செயலியில் "Defence | Team Huddle" என்ற பெயரில் ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. ஹெக்செத்துடன் தொடர்பில் உள்ள 12 க்கும் மேற்பட்ட நபர்கள் இந்தக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஹெக்செத்தின் மனைவி ஜெனிஃபர், பத்திரிகையாளரும் முன்னாள் ஃபாக்ஸ் நியூஸ் தயாரிப்பாளருமான, அவரது சகோதரர் பில், வழக்கறிஞர் டிம் பர்லாடோர் ஆகியோரும் குழுவில் அடங்குவர். டிம் பர்லாடோர் பென்டகனில் பணிபுரிந்துகொண்டே ஹெக்செத்தின் தனிப்பட்ட சட்ட ஆலோசகராகவும் பணியாற்றுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட F/A-18 ஹார்னெட் ஏவுகணைகள் செலுத்தப்படும் நேரத்தை ஹெக்செத் குழுவில் வெளியிட்டதாக தி நியூயார்க் டைம்ஸ் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியுள்ளது. இதுபோன்ற முக்கியமான விவரங்களை அங்கீகரிக்கப்படாத முறையில் பகிர்வது கடுமையான தேசிய பாதுகாப்புக் குற்றமாகக் கருதப்படும். பென்டகன் தகவல் தொடர்பு நெறிமுறைகளின் மீறலுக்காகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கு முன்பு, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் மூலம் ஏமன் மீதான தாக்குதல்கள் பற்றிய தகவல் கசியவிடப்பட்டது. அதுவும் சிக்னல் ஆப் மூலம்தான் நடந்தது. ஏமன் மீதான வான்வழித் தாக்குதல்களைப் பற்றி விவாதிக்கும் ஒரு குழுவில் தி அட்லாண்டிக்கின் தலைமை ஆசிரியர் ஜெஃப்ரி கோல்ட்பெர்க்கை மைக் வால்ட்ஸ் சேர்த்துவிட்டார். இது வால்ட்ஸ் கவனக்குறைவாகச் செய்த தவறுதான் என்று கூறப்படுகிறது. ஆனால், அந்த கசிவு நடந்த சில வாரங்களுக்குள் மீண்டும் ஏமன் தாக்குதல் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன.
mike waltz
அந்தக் குழுவில் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப், தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட் போன்ற உயர்மட்ட அதிகாரிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கோல்ட்பர்க் தற்செயலாக ரகசியக் குழுவில் சேர்க்கப்பட்ட தகவல் வெளியானது கடுமையான எதிர்வினைகளைத் தூண்டியது.
இதனிடையே ஹெக்செத் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். "யாரும் போர் திட்டங்களை குறுஞ்செய்தியாக அனுப்பவில்லை. அதைப்பற்றி நான் சொல்ல வேண்டியது அவ்வளவுதான்" என்று பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். செனட் ஆயுத சேவைகள் குழுவின் முன் சாட்சியமளித்த கப்பார்டும் எந்தத் திட்டமும் தவறாகப் பரிமாறப்படவில்லை என்று கூறியுள்ளார்.
இந்தத் தகவல் கசிவுகளைத் தொடர்ந்து, பென்டகனின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஒரு முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளார். துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் மற்றும் தலைமைத் தளபதி சூசி வைல்ஸ் வால்ட்ஸை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியுள்ளனர். ஆனால், டிரம்ப் நிர்வாகம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.