பூமியை விடப் பெரிசு... உயிர்கள் வாழும் புதிய வேற்று கிரகம்... நாசா கண்டுபிடிப்பு!
K2-18b என்ற கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிந்துள்ளனர். பூமியில் பாசிகள் போன்ற நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் ரசாயனங்கள் அங்கு கண்டறியப்பட்டுள்ளன. இது வேற்று கிரகத்தில் உயிர் இருப்பதற்கான வலுவான ஆதாரமாக இருக்கலாம்.

பூமியைப் போன்ற இன்னொரு கிரகம்
வேற்று கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்ற கேள்விக்கு விடை தேடி வந்த வானியலாளர்களுக்கு, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST) புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. நம் சூரிய குடும்பத்திற்கு அப்பால், சுமார் 124 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள K2-18b என்ற கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வானியற்பியலாளர் பேராசிரியர் நிக்கோ மதுசூதன் தலைமையிலான ஆய்வில், K2-18b-ன் வளிமண்டலத்தில் 'டிமெத்தில் சல்பைட் (DMS)' மற்றும் 'டிமெத்தில் டிசல்பைட் (DMDS)' ஆகிய இரசாயனங்களின் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாயுக்கள், பூமியில் பாசிகள் போன்ற நுண்ணுயிரிகளால் மட்டுமே பிரத்யேகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன.
🆕 Carbon-bearing molecules including methane and carbon dioxide have been discovered in the atmosphere of the habitable zone exoplanet K2-18 b by a team of astronomers using data from Webb. K2-18 b is 8.6 times as massive as Earth, and orbits a cool dwarf star. 💫 🧵👇 pic.twitter.com/4Wk3LCfnuY
— ESA Webb Telescope (@ESA_Webb) September 11, 2023
பூமியைப் போன்ற சூழல்
பூமியை விட 2.5 மடங்கு பெரியதான K2-18b, அதன் நட்சத்திரத்தின் "வாழக்கூடிய மண்டலத்தில்" (habitable zone) அமைந்துள்ளது. அதாவது, மேற்பரப்பில் திரவ நீர் இருக்கக்கூடிய தொலைவில் இது உள்ளது. இந்த வளிமண்டல இரசாயனத் தடயங்களுடன் சேர்ந்து, இந்தக் கிரகத்தில் ஒரு பெரிய உயிரிக்கோளம் (biosphere) அல்லது கடல் இருக்கக்கூடும் என்ற சாத்தியக்கூறுகள் வலுப்பெறுகின்றன.
"இதுவரை கண்டறியப்பட்டவற்றில், இதுவே வேற்று கிரகத்தில் உயிர் இருப்பதற்கான வலுவான ஆதாரம். அடுத்த ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் இந்த சமிக்ஞையை உறுதிப்படுத்த முடியும் எனக் கருதுகிறேன்" என பேராசிரியர் நிக்கோ மதுசூதன் தெரிவித்துள்ளார்.
அதிக எச்சரிக்கை தேவை
இருப்பினும், விஞ்ஞானிகள் இந்த கண்டுபிடிப்பு குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இந்தத் தகவல்கள் இன்னும் உயிரினம் இருப்பதை உறுதிப்படுத்தவில்லை. பிற ஆய்வுக்குழுக்கள் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் தரவுகளை மீண்டும் ஆய்வு செய்து, டி.எம்.எஸ். இருப்பதற்கு வலுவான புள்ளிவிவர ஆதாரம் இல்லை என்று வாதிடுகின்றனர்.
உயிரினங்கள் இருப்பதற்கான உறுதியான ஆதாரத்தை அறிவிக்க, விஞ்ஞானிகளுக்கு 99.99999% நம்பிக்கை (five sigma threshold) உண்டாக வேண்டும். தற்போதைக்கு, இந்த சமிக்ஞைகள் உறுதியான ஆதாரம் அல்ல, மாறாக நம்பிக்கைக்குரிய குறிப்புகள் மட்டுமே.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி
வரும் மாதங்களில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் செய்யப்படும் மேலும் பல ஆய்வுகள் இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வு முடிவுகள் உறுதி செய்யப்பட்டால், மனிதகுல வரலாற்றில் இது ஒரு திருப்புமுனையாக இருக்கும். அண்டத்தில் உயிரினங்கள் அரிதானது அல்ல, பொதுவானதே என்பதை அது நிரூபிக்கும்.