HBDAnnadurai : அறிஞர் அண்ணா.? யார் இவர்.? தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார்.?
அரசியல் சிந்தனையற்று பின்தங்கி கிடந்த தமிழ் சமுதாயத்தை அண்ணா அவர்கள் தன் எழுத்துக்களாலும், பேச்சுகளிலும் தட்டி எழுப்பியவர் அறிஞர் அண்ணா, தமிழகத்திற்கு அவர் செய்த சாதனைகள் பல..
அறிஞர் அண்ணா யார்.?
திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கிய அறிஞர் அண்ணா தமிழகத்தில் தமிழக மக்களுக்காக ஆற்றிய பணிகள் ஏராளம்.. அவரது பிறந்தநாளில் அவரது வாழ்க்கை வரலாற்றை சற்று திரும்பி பார்க்கலாம்.
நடராஜன் - பங்காரு அம்மாள் இணையருக்கு 1909 செப்டம்பர் 15ம் தேதி காஞ்சிபுரத்தில் ஓர் எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தார் அறிஞர் அண்ணா.
மிக எளிய குடும்பத்தில் பிறந்த அண்ணா தமது சித்தி ராஜாமணி என்பவராலேயே வளர்க்கப்பட்டார்.
காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த அண்ணா சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்டர்மீடியேட் படிப்பை முடித்தார்.
பச்சையப்பன் கல்லூரி வாழ்க்கையே அண்ணாவின் அரசியல் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
அண்ணாவின் முதல் தேர்தல்.?
ஆங்கிலப் பேராசிரியரும். நீதிக்கட்சியில் செயல்பட்டவருமான, வரதராஜன்தான் அரசியலின் பக்கம் அண்ணாவின் கவனத்தைத் திருப்பியவர். பேராசிரியர் வேங்கடசாமி என்பவரும் அண்ணாவிடம் அரசியல் ஈடுபாடு ஏற்படக் காரணமாக இருந்தார்.
மோசூர் கந்தசாமி முதலியார், மணி திருநாவுக்கரசு முதலியார் ஆகிய தமிழ்ப் பேராசிரியர்கள்தான் அண்ணாவுக்கு தமிழைக் கற்பித்தனர்.
21 வயதில் அண்ணாவுக்கும் ராணி அம்மையாருக்கும் சம்பிரதாய முறைப்படி திருமணம் நடந்தது.
கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த அண்ணா 1931ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர் பேரவையின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
படித்து முடித்தவுடன் காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தராக 6 மாதம் பணி செய்தார். பிறகு சென்னை கோவிந்தப்ப நாயக்கன் நடுநிலைப்பள்ளியில் தமிழாசிரியராக சிறிது காலம் பணியாற்றினார்.
அண்ணாவும் பெரியாரும்
இந்த கால கட்டத்தில் நீதிக்கட்சி செயல்பாடுகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டார் அண்ணா.
1935ம் ஆண்டு திருப்பூரில் நடந்த செங்குந்த இளைஞர் மாநாட்டில் பெரியாரை முதல் முதலாக சந்தித்தார் அண்ணா. அப்போது முதல் பெரியார் அண்ணாவின் தலைவரானார்.
1937ம் ஆண்டு ஈரோடு சென்ற அண்ணா அங்கு பெரியாரின் குடியரசு, மற்றும் விடுதலை நாளிதழ்களில் துணை ஆசிரியராக 60 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தார்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக இறங்கிய பெரியார் மற்றும் அண்ணா ஆகியோர் 1938ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். அண்ணாவுக்கு 4 மாத சிறைவாசம் விதிக்கப்பட்டது. பெரியாருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை கிடைத்தது.
ஆரிய மாயை, நீதி தேவன் மயக்கம், கம்பரசம் போன்ற சிறு நூல்களை எளிய நடையில் எழுதி அண்ணா வெளியிட்டார்.
திராவிடர் கழகத்தினர் கட்டாயம் கருப்புச் சட்டை அணியவேண்டும் என்று பெரியார் கொண்டு வந்த தீர்மானத்தை அண்ணா விரும்பவில்லை.
முதலமைச்சர் பதவியை பிடித்த அண்ணா
திராவிடர் கழக கூட்டங்களுக்கு அண்ணாவே வெள்ளை சட்டையில் வந்து பேசியது பெரியாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
பெரியார் - அண்ணா இடையே விரிசல் அதிகமானது.
1949 செப்டம்பர் 17ம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தை ஏற்படுத்தினர். அண்ணா அதன் பொதுச் செயலாளர் ஆனார்.
1957ம் ஆண்டு நடந்த இரண்டாவது பொதுத் தேர்தலில் பங்கேற்று 15 எம்.எல்.ஏ.க்களை வென்றது. காஞ்சிபுரத்தில் அண்ணா வெற்றி பெற்றார்.
1962-ம் ஆண்டு நடந்த அடுத்த தேர்தலில் திமுக 50 தொகுதிகளை வென்றது. ஆனால், அண்ணா தோல்வி அடைந்தார்.
ராஜாஜி தலைமையிலான சுதந்திரா கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட திமுக வெற்றி பெற்றது. 1967 மார்ச் 6-ம் தேதி அண்ணா முதல்வரானார்.
அண்ணாவின் சாதனைகள்
சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது,
புரோகிதர்கள் இல்லாமல் நடக்கும் சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம்
1 ரூபாய்க்கு ஒருபடி அரிசி பொது விநியோகத் திட்டம் மூலம் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார் அண்ணா
தமிழ்நாடு அரசின் கொள்கையாக இருமொழிக் கொள்கையையும் அண்ணா கொண்டுவந்தார்
புன்செய் நிலங்களுக்கு நிலவரி ரத்து செய்யப்பட்டது.
பேருந்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டது.
ஏழைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க ஏற்பாடு - பி.யு.சி வரையில்.
annadurai
அண்ணாவின் திட்டங்கள்
கடற்கரைச் சாலையில் தமிழ்ச் சான்றோர்களுக்குச் சிலை நிறுவினார்.
(திருவள்ளுவர், இளங்கோ அடிகள், கம்பர், ஜி.யு.போப், பாரதியார், பாரதிதாசன், ஔவையார், கண்ணகி, கால்டுவேல், உ.வே.ச.)
அரசு அலுவலகங்களில் உள்ள கடவுளார் படங்களை நீக்க ஆணை பிறப்பித்தார்.
பேருந்துகளில் திருக்குறள் இடம்பெற செய்தது.
சென்னையில் உள்ள குடிசை வாசிகளுக்கு தீ பிடிக்காத வீடுகள் கட்டித் தந்தார்.
விதவைத் திருமணம் செய்து கொள்வோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கினார்.
அறிஞர் அண்ணாவும் தமிழகமும்
பல சாதனைகளுக்கு சொந்தகாரரான அறிஞர் அண்ணவிற்கு புற்றுநோய் ஏற்பட்டு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். இருந்த போதும் அவரது உடல் நிலை முன்னேற்றம் ஏற்படவில்லை. 1969 ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் அண்ணாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிப்ரவரி 3-ம் தேதி அதிகாலை 12.20க்கு அண்ணா இறந்தார்.
இந்த உலகை விட்டு அண்ணா மறைந்தாலும் அண்ணா என்ற பெயர் ஒரு பண்பாட்டின் குறியீடாகிவிட்டது. அது ஒரு வரலாறாக, அடையாளமாக கொண்டாடப்படுகிறது. அவரது பெயரில் கட்சி, பல்கலைக்கழகம், விமான நிலையம், சாலை, நூலகம் என்று ஏராளமான நிறுவனங்கள் தமிழகத்தில் பல இடங்களில் உள்ளது.