கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்கள்; விஜய் கூட்டத்தில் நடந்தது என்ன?
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கரூர் துயர சம்பவம்
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டம் பெரும் சோகமாக முடிந்தது. கூட்ட நெரிசலில் சிக்கி 17 பெண்கள், 9 குழந்தைகள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தையும், பொதுமக்களையும் உலுக்கியிருக்கிறது.
விஜய் பிரச்சாரம்
விஜயின் பிரச்சாரத்துக்கு காவல் துறையினர் காலை 10.30 மணிக்கே அனுமதி வழங்கினர். ஆனால் அவர் நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதால், கரூருக்கு மாலை 7 மணி கடந்தே வந்தார். இதற்குள் மக்கள் அங்கிருந்தே காத்திருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பிரச்சாரப் பேருந்து மெதுவாகவே நகர முடிந்தது.
கரூர் கூட்ட நெரிசல்
அங்கு விஜய் உரையாற்ற தொடங்கியபோது, அவரது மைக்கில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. பேச்சை கேட்க முடியாததால் மக்கள் முன்னோக்கி தள்ளியதால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. சிக்கியிருந்தவர்கள் மூச்சுத் திணறி மயங்கி விழுந்தனர். மேலும் அருகிலிருந்து மரக்கிளையும் உடைந்து விழுந்ததால் பலர் காயமடைந்தனர். நிலைமை மோசமான நிலையில் இருந்தும், உரை முடிந்த பின் தான் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாகத் தொடங்கின.
பெண்கள் குழந்தைகள் பலி
உயிரிழந்தவர்களும், காயமடைந்தவர்களும் ஆம்புலன்ஸில் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தங்களின் அன்புக்குரியவர்கள் உயிரிழந்த செய்தி அறிந்த உறவினர்கள் மருத்துவமனை முன்பு கதறி அழுததால் அந்த பகுதி முழுவதும் துயரச் சுமையாய் மாறியது.
கரூர் சம்பவம்
சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட பலர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஆம்புலன்ஸ் டிரைவர்களை தாக்கியதாகவும் தவேக தொண்டர்கள் மீது கூடுதல் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஒரே இரவில் கரூரில் நடந்த இந்த சோகச் சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது.