விஜய்க்கு ஷாக் கொடுத்த நீதிபதி.! முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து அதிரடி
நாமக்கல்லில் தனியார் மருத்துவமனை தாக்கப்பட்ட வழக்கில், த.வெ.க மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட பிரச்சார கூட்டத்தால் நாடே திரும்பிபார்த்துள்ளது. அந்த வகையில் கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் கரூர் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கரூர் கூட்டத்திற்கு முன்னதாக நாமக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமானோர் மயக்கம் அடைந்தனர். மேலும் பொது சொத்துக்கள் சேதம் அடைந்தது.
இந்த நிலையில் நாமக்கல்லில், த.வெ.க. தலைவர் விஜய், செப்டம்பர் 27 ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக, மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மீது நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் எனக் கூறி, முன் ஜாமீன் கேட்டு சதீஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தான் எந்த குற்றமும் செய்யவில்லை. அரசியல் காரணங்களுக்காக வழக்கில் தன்னை சேர்த்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த ஒரே காரணத்துக்காக தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த மனு, நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ், அனைத்து விதிகளையும் பூர்த்தி செய்வதாக கூறி அனுமதி பெற்றவர் மனுதாரர். அவரது கட்சியினரின் செயல்பாடுகளால் 5 லட்சம் ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இது தவிர பொது சொத்துக்கள் சேதப்படுத்தியதாக மேலும் எட்டு வழக்குகள் அவருக்கு எதிராக பதியப்பட்டுள்ளதாக கூறி, சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இவற்றை ஆய்வு செய்த நீதிபதி, கட்சியினர் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், எதுவும் தெரியாது என மனுதாரர் எப்படி கூறலாம்? கட்சியினரை கட்டுப்படுத்த தெரியாதா? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா என சரமாரியாக கேள்வி எழுப்பி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.