பேருந்தில் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணம்.! குட் நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் இலவச பேருந்து பயண அட்டைகளின் காலம் 2025 செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் அரசு பேருந்துகள்
தமிழகத்தில் பல்வேறு வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் குறைந்த கட்டணத்தில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதன் மூலம் நாள்தோறும் பல கோடி மக்கள் பயன் பெற்று வருகிறார்கள். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்குகிறது, தினசரி 5,100-க்கும் மேற்பட்ட வழித்தடங்களை உள்ளடக்கி, 1.7 கோடி பயணிகளுக்கு சேவை வழங்குகிறது.
மேலும் மக்களுக்கு உதவி செய்திடும் வகையில் அனைத்து பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவிகள், மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட அனைத்து பெண்களும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பயண டோக்கன்கள் மூலம் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது.
பேருந்தில் கட்டணமில்லா பயணம்
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில், மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப்போராட்டவீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா பயண அட்டைகளை இணையதளம் வாயிலாக பெற்றிடும் வகையில், 07.09.2023 முதல் முதற் கட்டமாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் உள்ள பயனாளிகள் அனைவரும் கட்டணமில்லா பயண அட்டைகளை இணையதளம் வழியாக பெறுகின்ற வசதியினை அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் நடைமுறைப் படுத்த புதிய வசதிகளுடன் கூடிய மென் பொருள் தயாரிப்பு பணிகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNEGA) வழியாக மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சுதந்திரப்போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் இலவச பயணம்
இதனை செயல்படுத்த, கூடுதல் போதிய கால அவகாசம் தேவைப்படுகின்ற நிலையில், ஏற்கனவே பயனாளிகள் பயன்படுத்தி வரும் 31/03/2025 வரை செல்லத்தக்க கட்டணமில்லா பயண அட்டைகளை, 30/09/2025 வரை மேலும் நீட்டித்து பயணிகள் சிரமமின்றி பயணம் செய்யலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர்சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா பயண அட்டைகளை இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து,
பயனாளிகள் பெற்றிட வழிவகை செய்யப்படும் என அறிவித்ததன் அடிப்படையில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) வழியாக மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப்போராட்டவீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இணையதளம் வாயிலாக கட்டணமில்லா பயணஅட்டைகளை பெறும்வசதி, முதற் கட்டமாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இலவச பயண அட்டை காலஅவகாசம் நீட்டிப்பு
இந்த வசதியினை அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் விரிவுபடுத்தி இலவச பயண அட்டைகளை புதியதாக பெறவும், ஏற்கனவே உள்ள பயண அட்டைகளை புதுப்பிக்கவும் ஏதுவாக புதிய வசதிகளுடன் கூடிய மென் பொருள் தயாரிப்பு பணிகள், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வழியாக (TNeGA) தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை செயல்படுத்த போதிய கால அவகாசம் தேவைப்படுகின்ற நிலையில்,
பயனாளிகள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையிடம் ஏற்கனவே பயன்படுத்தி வரும் பயண அட்டைகளை மேலும் மூன்று மாத காலம் நீட்டித்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, 31/03/2025 வரை செல்லத்தக்க கட்டணமில்லா பயண அட்டைகளை, 30/09/2025 வரை நீட்டித்து அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அனைத்து பயனாளிகளும் எவ்வித சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.