- Home
- Tamil Nadu News
- அய்யா வைகுண்டரை இழிவுப்படுத்திய டிஎன்பிஎஸ்சி! மன்னிப்பு கேளுங்கள்! பொங்கியெழுந்த அரசியல் தலைவர்கள்!
அய்யா வைகுண்டரை இழிவுப்படுத்திய டிஎன்பிஎஸ்சி! மன்னிப்பு கேளுங்கள்! பொங்கியெழுந்த அரசியல் தலைவர்கள்!
டிஎன்பிஎஸ்சி தேர்வில் அய்யா வைகுண்டரை இழிவுப்படுத்தியதற்கு அன்புமணி, அண்ணாமலை ஆகியோர் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

TNPSC Insulting Ayya Vaikundar
டிஎன்பிஎஸ்சி தேர்வில் அய்யா வைகுண்டரை இழிவுப்படுத்தியதாக கூறி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அய்யா வைகுண்டரை முடிவெட்டும் பெருமாள் என்று கூறுவதா? அரசுப் பணியாளர் தேர்வாணையம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
அய்யா வைகுண்டரை இழிவுபடுத்திய டிஎன்பிஎஸ்சி
இது தொடர்பாக அன்புமணி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், ''அய்யா வழி என்ற புதிய கோட்பாட்டை உருவாக்கிய சாமித்தோப்பு அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வுகளில் அவரை முடிவெட்டும் கடவுள் என குறிப்பிடப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காட்டிய அலட்சியத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
முடிவெட்டும் பெருமாள் என்று கூறுவதா?
இளநிலை உதவி வரைவாளர் பணிக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில், அய்யா வைகுண்ட சுவாமிகள் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கான முதல் விருப்பவாய்ப்பாக “முடிசூடும் பெருமாள் மற்றும் முத்துக்குடி என்று அழைக்கப்பட்டார்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பில் முடிசூடும் பெருமாள் என்பதை “Vishnu with a crown” என்று மொழிபெயர்ப்பதற்கு பதிலாக ‘the god of hair cutting' என்று தவறாக மொழிபெயர்த்துள்ளனர். இது அய்யா வழியை பின்பற்றுபவர்களின் உணர்வுகளையும் காயப்படுத்தியுள்ளது.
மன்னிப்பு கேட்க வேண்டும்
தமிழ்நாடு அரசின் துணை ஆட்சியர் உள்ளிட்ட உயரிய பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒரு சாதாரண சொல்லைக் கூட சரியாக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முடியாத நிலையில் இயங்கி வருவது வருத்தமளிக்கிறது. சுவாமி அய்யா வைகுண்டரை ‘the god of hair cutting' என்று குறிப்பிட்டதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மன்னிப்பு கேட்க வேண்டும்; அந்த வினாவுக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும்'' என்றார்.
அண்ணாமலையும் கண்டனம்
இதேபோல் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''இளநிலை உதவி வரைவாளர் பணிக்காக நடைபெற்ற TNPSC தேர்வில், அய்யா வைகுண்டர் குறித்த கேள்வியின் ஆங்கில மொழிபெயர்ப்பில், முடிசூடும் பெருமாள் என்ற அய்யா வைகுண்டரின் பெயரை, "the god of hair cutting" என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். தமிழக அரசுப் பணிக்கான தேர்வில், பல கோடி மக்கள் வணங்கும் அய்யா வைகுண்டரின் மற்றொரு பெயரை, இத்தனை கவனக்குறைவாகவும், பொறுப்பின்றியும் மொழிபெயர்த்திருப்பது, கடுமையான கண்டனத்துக்குரியது.
இப்படியா கவனக்குறைவாக இருப்பது?
அரசுப் பணி தேர்வுகளுக்கான கேள்விகளைத் தயார் செய்யும்போது, இது போன்று கவனக்குறைவாக இருப்பது, திமுக அரசு, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை எத்தனை கிள்ளுக்கீரையாக நினைக்கிறது என்பதையே காட்டுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.