- Home
- Tamil Nadu News
- Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை.. பெண்கள் அக்கவுண்ட்டில் இன்று ஏறும் ரூ.2,500? புதிய அப்டேட் இதோ!
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை.. பெண்கள் அக்கவுண்ட்டில் இன்று ஏறும் ரூ.2,500? புதிய அப்டேட் இதோ!
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையாக பெண்களின் வங்கிக் கணக்கில் இன்று ரூ.2,500 ஏறும் என தகவலகள் பரவி வருகின்றன. இது தொடர்பாக தவெக அரசு அறிவித்துள்ள அப்டேட் என்ன? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

மகளிர் உரிமைத் தொகை
தமிழ்நாட்டில் கடந்த திமுக அரசு பெண்களுக்கு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' என்ற பெயரில் மாதந்தோறும் 1,000 உரிமைத்தொகை வழங்கி வந்தது. மாதம்தோறும் 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தது. தமிழக அரசியல் வரலாற்றில் அண்மையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு புதிதாக ஆட்சிக்கு வந்த விஜய்யின் தவெக அரசு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்திற்குப் பதிலாக, தவெக-வின் தேர்தல் வாக்குறுதியான 'மதிப்புமிக்க மகளிர் திட்டம்' மூலம் மாதம் ரூ.2,500 பெண்களுக்கு வழங்கப்படும் என்று கூறியிருந்தது.
பெண்கள் அக்கவுண்ட்டில் இன்று ஏறும் ரூ.2,500?
கடந்த மே மாதம் தவெக அரசு பொறுப்பேற்றது முதலே, மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 எப்போது அமலுக்கு வரும் என்ற விவாதம் தொடர்ந்து வருகிறது. மே மாதத்தில் திட்ட மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக வழக்கமான ரூ.1,000 மட்டுமே பெண்களின் அக்கவுண்ட்டில் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில், "ஜூன் 15ஆம் தேதியான இன்று முதல் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.2,500 வரவு வைக்கப்படும்" என்ற ஒரு தகவல் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
அரசு வட்டாரங்கள் கூறுவது என்ன?
ஆனால், அரசு வட்டாரங்களிலிருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி, இந்தச் செய்தி முற்றிலும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது. முறைப்படியான அரசாணையோ அல்லது முழுமையான பட்ஜெட் அறிவிப்போ இல்லாமல் தொகையை உடனடியாக உயர்த்த முடியாது என்பதால், வழக்கமான நடைமுறைப்படி இன்று (ஜூன் 15) பயனாளிகளின் கணக்கில் ரூ.1,000 மட்டுமே வரவு வைக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
புதிய அப்டேட் இதுதான்
தமிழகத்தில் தற்போது சுமார் 1.3 கோடி பெண்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். மாதம் ரூ.1,000 வழங்கவே ஆண்டுக்கு சுமார் ரூ.15,600 கோடி தேவைப்படும் நிலையில், அதை ரூ.2,500 ஆக உயர்த்தினால் ஆண்டுக்கு ரூ.39,000 கோடிக்கு மேல் நிதி தேவைப்படும். மாநிலத்தின் தற்போதைய கடன் சுமையைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தை தொய்வில்லாமல் செயல்படுத்த முதலமைச்சர் விஜய் நிதிநிலை குறித்த 'வெள்ளை அறிக்கை' தயாரிக்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
தவெக அரசின் பிளான் என்ன?
தவெக-வின் தேர்தல் அறிக்கையின்படி, 60 வயதுக்குட்பட்ட தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே இந்த ரூ.2,500 நிதியுதவி வழங்கப்பட உள்ளது. தற்போதுள்ள பயனாளிகளில் சுமார் 15% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால், அவர்களை முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் (OAP) கீழ் மாற்றும் பணிகளும், போலி குடும்ப அட்டைகளை முறைப்படுத்தும் பணிகளும் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.
எனவே, 'மதிப்புமிக்க மகளிர் திட்டம்' மூலம் ரூ.2,500 உயர்வு கிடைப்பது உறுதி என்றாலும், அதற்கான தகுதிப் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் முடிவடைந்த பின்னரே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை சமூக வலைத்தள வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

