- Home
- Tamil Nadu News
- TN Govt Schemes: மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை.. அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?
TN Govt Schemes: மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை.. அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?
TN Govt Schemes: தமிழகத்தில் UPSC குடிமைப் பணி முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் ரூ.25,000 ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. எப்படி விண்ணப்பிப்பது? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

UPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை
தமிழகத்தில் UPSC சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதாவது குடிமைப் பணி முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் ரூ.25,000 ஊக்கத்தொகை பெற இன்று (ஜூன் 19) முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி மூலம் அரசு பணியிடங்களின் நியமனம் வெளிப்படையாக நடந்து வருவதால் மாநிலம் முழுவதும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நம்பிக்கையுடன் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.
நான் முதல்வன் திட்டம்
இதேபோல் வங்கி தேர்வு, ரயில்வே தேர்வு, UPSC எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் குடிமைப் பணி தேர்வுகளுக்கும் தமிழநாட்டு இளைஞர்கள் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர். இதில் சில இளைஞர்கள் தங்களது திறமை மற்றும் விடாமுயற்சியால் UPSC தேர்வில் வெற்றி பெற்று மாநிலத்துக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.
தமிழகத்தில் மாநில தேர்வுக்கு ஏராளமான மாணவர்கள் தயாராகுவது போல் UPSC தேர்வுகளுக்கு பெரும்பாலானவர்கள் விண்ணப்பிப்பது இல்லை. இதனால் தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்திய அரசு பணிக்கு ஆர்வமுடன் விண்ணப்பிக்கும் வகையில் கடந்த திமுக அரசு நான் முதல்வன் திட்டம் என்ற பெரியல் UPSC தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தது.
ஊக்கத்தொகை திட்டத்தை தொடரும் தவெக அரசு
இதனைத் தொடர்ந்து 2026 சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தவெக ஆட்சிக்கு வந்ததும் முந்தையை திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நான் முதல்வன் திட்டத்தையும் தவெக அரசு தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், யு.பி.எஸ்.சி குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் ரூ.25,000 ஊக்கத்தொகை பெற இன்று (ஜூன் 19) முதல் விண்ணப்பிக்கலாம் என தவெக அரசு தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'தமிழ்நாடு அரசானது ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம்: (UPSC) நடத்தும் குடிமைப் பணித் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் யு.பி.எஸ்.சி குடிமைப் பணித் தேர்வு ஊக்கத்தொகைத் திட்டத்தை செயல்படுத்துகிறது.
இத்திட்டத்தின் கீழ், 2026-ஆம் ஆண்டின் யு.பி.எஸ்.சி குடிமைப்பணி /இந்திய வனப்பணி முதன்மைத் தேர்வுகளுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு 25,000 ரூபாய் நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு நடப்பு ஆண்டில் (2026) யு.பி.எஸ்.சி குடிமைப்பணி / இந்திய வனப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், ஆன்லைன் மூலம் (https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc_registration/) 19.06.2026 முதல் 30.06.2026 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்' என்று கூறப்பட்டுள்ளது.
மாணவர்கள் மகிழ்ச்சி
யு.பி.எஸ்.சி குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் ரூ.25,000 ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம். அரசின் இந்த ஊக்கத்தொகை திட்டம் மேலும் பல மாணவர்களை மத்திய அரசின் குடிமை பணி தேர்வுகளுக்கு தயாராக தூண்டி அவர்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று கல்வியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

