- Home
- Tamil Nadu News
- டெல்லி குண்டுவெடிப்பு.. அம்பானி, அமித்ஷா, மோடி தான் பொறுப்பு.. பொடி வைத்து பேசும் திருமா..
டெல்லி குண்டுவெடிப்பு.. அம்பானி, அமித்ஷா, மோடி தான் பொறுப்பு.. பொடி வைத்து பேசும் திருமா..
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்திற்கு மோடி, அமித்ஷா, அம்பானி தான் பொறுப்பு என குற்றம் சாட்டியுள்ள விசிக தலைவர் திருமாவளவன் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களில் ஒருவர் கூட தப்பிக்கக்கூடாது என கோரிக்கை விடுத்துள்ளார்.

குண்டுவெடிப்பு அதிர்ச்சி அளிக்கிறது
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இச்சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி உறுப்பினருமான திருமாவளவன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தில்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடித்து பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மோடி, அமித்ஷா, அம்பானி கூட்டணி தானே பொறுப்பு..?
நாட்டின் தலைநகரிலேயே, அதுவும் அதிஉயர் பாதுகாப்பு வளையத்துக்குட்பட்ட பகுதியிலேயே காரில் வெடிமருந்தை நிரப்பிக்கொண்டு எப்படி ஊடுருவமுடிந்தது? உள்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள 'மோடி-அமித்ஷா-அம்பானி' கூட்டணி தானே இதற்கு பொறுப்பேற்கவேண்டும்?
ஒரு குற்றவாளி கூட தப்பிவிடக்கூடாது
பீகார் சட்டமன்றப் பொதுத்தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப பதிவுக்கு முதல் நாளில் இப்படி நடந்திருப்பதால் இதனை அத்தேர்தலோடு முடிச்சுப்போட்டுப் பார்க்கும் நிலை உருவாகிறது. ஏற்கனவே இப்படிப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் தேர்தல் காலங்களில் நடந்தேறியுள்ளன.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு விசிகசாரபில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். பொதுமக்களுக்கு எதிரான இத்தகைய கொடூரப் போக்குகளை விசிக மிக வன்மையாகக் கண்டிக்கிறது. குற்றவாளிகள் ஒருவரும் தப்பிவிடக் கூடாது. அனவரையும் கைதுசெய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.