- Home
- Tamil Nadu News
- TASMAC: என்ன புதுச்சேரி, பெங்களூரு.. வெளிநாட்டு மது பிராண்ட்களுடன் டோட்டலாக மாறும் டாஸ்மாக்.. குடிமகன்கள் குஷி!
TASMAC: என்ன புதுச்சேரி, பெங்களூரு.. வெளிநாட்டு மது பிராண்ட்களுடன் டோட்டலாக மாறும் டாஸ்மாக்.. குடிமகன்கள் குஷி!
TASMAC: புதுச்சேரி, பெங்களூருவுக்கு டப் கொடுக்கும் விதமாக டாஸ்மாக்கில் உயர்ரக வெளிநாட்டு மது பிராண்ட்களை டாஸ்மாக்கில் களமிறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் குடிமகன்கள் குஷியாகியுள்ளனர்.

717 டாஸ்மாக் கடைகள் மூடல்
தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரஙக்ளில் தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. அரசுக்கு வருவாய் ஈட்டி கொடுப்பதில் டாஸ்மாக் கடைகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. பண்டிகை காலங்களில் டாஸ்மாக் வருமானம் பன்மடங்கு பெருகி அரசுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த தவெக அரசு தமிழகத்தில் பேருந்து நிலையங்கள், கோயில்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட அதிரடியாக உத்தரவிட்டது.
தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு
தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி, மாநிலம் முழுவதும் 717 டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன. இந்த அதிரடி நடவடிக்கையால், டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளின் எண்ணிக்கை சுமார் 15 சதவீதம் வரை குறைந்தது. இதன் காரணமாக, தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டாஸ்மாக்கில் களமிறங்கும் வெளிநாட்டு மது பிராண்ட்டுகள்
இந்த நிலையில், வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில் டாஸ்மாக்கில் உயர்ரக வெளிநாட்டு மதுபானங்களை களமிறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் தங்களுக்குப் பிடித்தமான உயர்தர விஸ்கி மற்றும் பீர் வகைகள் தாராளமாகக் கிடைப்பதில்லை என்பதால், மதுப்பிரியர்கள் பலர் அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் பெங்களூருக்குச் சென்று வாங்கும் சூழல் உருவாகியுள்ளது.
அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் மதுப்பிரியர்களைத் தக்கவைக்கவும், கலால் துறைக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பைச் சரிசெய்யவும் டாஸ்மாக் நிர்வாகம் புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. அதன்படி, உலகளாவிய முன்னணி மதுபான பிராண்டுகளை (International Brands) நேரடியாக டாஸ்மாக் கடைகளில் அறிமுகம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ரூ.2,700 கோடி வரை வருவாய் உயர்த்த முயற்சி
இறக்குமதி செய்யப்படும் இந்த உயர்தர மதுபானங்களை பாதுகாப்பாக வைக்க, மேம்பட்ட குளிர்பதன சேமிப்பு வசதிகள் தேவைப்படுகின்றன. எனவே, முதற்கட்டமாக அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட ‘பிரீமியம்’ டாஸ்மாக் கடைகளில் மட்டும் இந்த வெளிநாட்டு பிராண்டுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படவுள்ளன. இந்த புதிய முயற்சி மூலம், நடப்பு நிதியாண்டில் மாநில அரசின் வருவாயை கூடுதலாக ரூ.2,700 கோடி வரை உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, 1981-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுபான விதிகளின் கீழ் உள்ள அனைத்து விதிமுறைகளையும், தனியாருக்குச் சொந்தமான கிளப்புகள் (FL22) மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் (FL3) கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. நகர்ப்புறங்களில் இறக்குமதி செய்யப்படும் உயர்தர மதுபானங்களுக்குப் பெரிய அளவில் வரவேற்பும் தேவையும் இருப்பதால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அரசின் வருவாயை எட்ட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

