- Home
- Tamil Nadu News
- Radhan Pandit : 24 மணி நேரத்தில் பறிபோன அரசுப் பணி... சிறப்பு அதிகாரியாக முதல்வர் விஜயின் ஆஸ்தான ஜோதிடர் ராதன் பண்டிட் நியமனம் ரத்து
Radhan Pandit : 24 மணி நேரத்தில் பறிபோன அரசுப் பணி... சிறப்பு அதிகாரியாக முதல்வர் விஜயின் ஆஸ்தான ஜோதிடர் ராதன் பண்டிட் நியமனம் ரத்து
Radhan Pandit OSD Post Withdrawn : தமிழக முதல்வர் விஜய்க்கு சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ராதன் பண்டிட் நியமிக்கப்பட்டதை வாபஸ் வாங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Radhan Pandit OSD Post Withdrawn
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், பிரபல ஜோதிடருமான ராதன் பண்டிட் வெற்றிவேல், தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக நேற்று நியமிக்கப்பட்டிருந்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போதே, கட்சித் தலைமைக்கு மிகவும் நெருக்கமானவராக ராதன் பண்டிட் வலம் வந்தார். ஜோதிடராகவும், கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் இரட்டைப் பொறுப்புகளில் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

கட்சிகள் எதிர்ப்பு
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு, கட்சியின் செய்தித் தொடர்பாளரும் ஜோதிடருமான ராதன் பண்டிட் வெற்றிவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்த தமிழக வெற்றி கழக அரசின் முடிவுக்கு, திமுக கூட்டணிக் கட்சிகளான மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மஜக தலைவரும் எம்.எல்.ஏ-வுமான தமீமுன் அன்சாரி, சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் TVK அரசை ஆதரிக்கப் போவதில்லை என்று தெரிவித்தார்.
சட்டசபையில் அவர் பேசுகையில், "அரசு நிர்வாகத்தில் ஜோதிட ஃபார்முலாக்களை கொண்டு வராதீர்கள். தனிப்பட்ட முறையில் நம்புவது அவரவர் விருப்பம், அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அது அரசுக்குள் வரக்கூடாது. நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் TVK-வை ஆதரிக்கவில்லை," என்றார்.
ராதன் பண்டிட் நியமனம் ரத்து
தேமுதிக பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான பிரேமலதா விஜயகாந்த், "முதல்வரின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ராதன் பண்டிட் நியமிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது," என்று கூறியுள்ளார். இதையடுத்து பேசிய முதல்வர் விஜய், உங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என கூறி இருந்தார்.
இந்த நிலையில், முதல்வரின் சிறப்பு அதிகாரியாக ராதன் பண்டிட் நியமிக்கப்பட்டதை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், பணி நியமன உத்தரவை ரத்து செய்து அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
விஜய்யின் அதிரடி அரசியல்
சமீபத்தில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 108 இடங்களில் TVK கட்சி வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு சில இடங்கள் குறைவாக இருந்ததால், காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன், கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
இதற்கிடையே, முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, விஜய் இன்று ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகே 500 மீட்டர் சுற்றளவில் செயல்படும் 717 அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளை, மக்கள் நலன் கருதி அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூட உத்தரவிட்டுள்ளார். பதவியேற்ற உடனேயே, இது போன்ற டாஸ்மாக் கடைகளைக் கணக்கெடுக்க விஜய் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

