12th Supplementary Exam: 12ம் வகுப்பு துணைத் தேர்வு எப்போது? வெளியானது அட்டவணை!
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 25 முதல் ஜூலை 2 வரை துணைத்தேர்வுகள் நடைபெறும். மே 14 முதல் 31 வரை துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25-ம் தேதி நிறைவடைந்தது. இந்த தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 7,92,494 மாணவர்கள் எழுதினர். இதில் 3,73,178 மாணவர்களும், 4,19,316 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில் 3,47,670 மாணவர்களும், 4,05,472 மாணவிகள் என மொத்தம் 7,53,142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
39,352 பேர் தோல்வி
கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு 94.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில் இந்த ஆண்டு 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்தாண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 39,352 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். மேலும், 10,049 மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தும் தேர்வெழுத வரவில்லை.
துணைத் தேர்வுகள்
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் இந்தாண்டே கல்லூரி சேரும் வகையில் துணைத் தேர்வுகள் நடத்தி முடிவுகள் விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டது. அதன்படி ஜூன் 25-ம் தேதி முதல் துணைத்தேர்வுகள் நடைபெறும். அதற்கான தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் துணைத்தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. ஜூன் 25ம் தேதி தொடங்கி ஜூலை 2ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12-ம் வகுப்பு துணைத் தேர்வு அட்டவணை 2025
ஜூன் 25 - தமிழ், ஜூன் 26 - ஆங்கிலம், ஜூன் 27 - கணிதம், விலங்கியல்,வணிகவியல், ஜூன் 28 - கணினி அறிவியல், கணினி பயன்பாடு, வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், ஜூன் 30 - வேதியியல், கணக்கியல், புவியியல், ஜூலை 01 - உயிரியல் , தாவரவியல், வரலாறு, ஜூலை 02 - இயற்பியல் பொருளாதாரம் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறுகிறது.
மே 14-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவே துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். துணைத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் மே 14-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள் அரசு தேர்வுகள் இயக்கத்தின் சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.