பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சென்னையில் திடீர் கைது
தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், மும்மொழி கொள்கையை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்திய தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் தமிழக அரசோ அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிகத்திற்கு வழங்க வேண்டிய 2,152 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இதனை எதிர்த்து தமிழக அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
மேலும் பிரதமர் மோடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதனிடையே சம கல்வி மக்கள் உரிமை என்ற பெயலில் தமிழகத்தில் மும்மொழி கொள்கையை செயல்படுத்த வேண்டும் என கோரி பாஜக சார்பாக கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டவர்கள் தங்களது கையெழுத்திட்டு ஆதரவை தெரிவித்தனர். மேலும் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்த இருப்பதாகவும், அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து கையெழுத்து பெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை சென்னை எம்ஜிஆர் நகரில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை தலைமையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. தமிழக கல்வி நிலையங்களில் இந்தி மொழிக்கு ஆதரவாக மக்களிடம் கையெழுத்தை பெற்று வந்தார்.
ஆனால் கையெழுத்து இயக்கத்திற்கு காவல் துறை அனுமதி பெற வில்லையெனவு்ம், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திடும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுவதாக கூறி காவல்துறையினர் தமிழிசை தடுத்தனர். ஆனால் தீவிரவாதி மாதிரி என்னை ஏன் காவல் துறை சுற்றி உள்ளனர், எனக்கு புரியவில்லையென தமிழிசை வாக்குவாதம் செய்தார்.
இதனையடுத்து தமிழிசையை போலீசார் கைது செய்த நிலையில் வாகனத்தில் ஏற மறுத்து காவல்துறையினரோடு வாக்குவாதம் மேற்கொண்டார். தொடர்ந்து அரை மணி நேரமாக வாகனத்தில் ஏற தமிழிசை மறுத்ததால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.