- Home
- Tamil Nadu News
- உதவி ஆய்வாளர் தேர்வுக்கு தயாராகிறீர்களா.? தேர்வர்களுக்கு இலவச பயிற்சி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
உதவி ஆய்வாளர் தேர்வுக்கு தயாராகிறீர்களா.? தேர்வர்களுக்கு இலவச பயிற்சி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.

காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடம்
தமிழக அரசு சார்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் படி அரசு பணியில் இணைய திட்டமிடுபவர்களுக்காக பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறது. அந்த வகையில் காவல் உதவி ஆய்வாளர் பதவியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இலவச பயிற்சி வகுப்பிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
விண்ணப்பிக்க கடைசி நாள்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 1299+ (53 shortfall vacancy) காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 04.04.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது. இத்தேர்வுக்கு 03.05.2025 வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி குறைந்தபட்சம் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 20-30 ஆகும். இட ஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பு தளர்த்தப்படும். வயது வரம்பு, தேர்வு நடைமுறை, பாடத்திட்டம், போன்ற கூடுதல் விவரங்களை https://tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
கட்டணமில்ல பயிற்சி வகுப்பு
இந்த தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் பொருட்டு சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் இத்தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 05.05.2025 (திங்கள் கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது.
வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். மேலும் TNPSC, TNUSRB, SSC உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான புத்தகங்கள் தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்தில் உள்ளன.மாணவர்கள் சுயமாக போட்டித்தேர்வுக்கு தயாராகும் வகையில் study hall வசதியும் உள்ளது.
பயிற்சி வகுப்பிற்கு அழைப்பு
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான மென் பாடகுறிப்புகள் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்பயிற்சிவகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்பநகல்,
தங்களது ஆதார் அட்டையின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சென்னை-32, கிண்டி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தை நேரடியாக அலுவலக வேலைநாட்களில் அணுகுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றார்கள்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
மேலும் விவரங்களுக்கு decgc.coachingclass@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள், இப்பயிற்சிவகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.