- Home
- Tamil Nadu News
- விவசாயிகளுக்கு பொங்கல் பரிசு.. காலையிலேயே குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு.. சூப்பர் அறிவிப்பு!
விவசாயிகளுக்கு பொங்கல் பரிசு.. காலையிலேயே குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு.. சூப்பர் அறிவிப்பு!
டிட்வா புயல் கனமழை காரணமாக சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணத்தொகையாக ரூ.111.96 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடபட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

டிட்வா புயல் கனமழையால் பயிர்கள் சேதம்
கடந்த ஆண்டு டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியதால் 1.39 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் பாதிக்கப்பட்டன.
இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 1ம் தேதி ஆய்வு கூட்டம் நடத்தி பயிர் பாதிப்படைந்த மாவட்டங்களில் வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை உடனடியாக கணக்கெடுப்பு பணிகள் மேற்கொண்டு நெல் பணி உள்ளிட்ட பயிர்களுக்கு நிவாரணத் தொகையாக ஹெக்டேருக்கு ரூ.20,000 ஆகவும் வழங்க உத்தரவிட்டிருந்தார்.
பயிர்களுக்கு ரூ.111.96 கோடி நிவாரணம்
அதன்படி பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 33 சதவீதத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட பயிர் பரப்பு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து கருத்துரு பெறப்பட்டது.
இந்த நிலையில், டிட்வா புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்களுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.111.96 கோடி நிவராணத்தொகை ஒப்பளிப்பு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் இன்று (ஜனவரி 15) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
84,848 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்
தற்போது ஒப்பளிக்கப்பட்ட நிவரணத்தொகையான ரூ.111.96 கோடி அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவள்ளுர், திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த பாதிக்கப்பட்ட 84,848 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
ஏற்கெனவே ரூ.289.63 கோடி நிவாரணத்தொகை
ஏற்கனவே 2024 நவம்பர் மற்றும் டிசம்பர் மாத வடகிழக்குப் பருவமழை, 2025 ஜனவரி மாதம் பெய்த மழையினால் 5.66 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு 3.60 இலட்சம் விவசாயிகள் பயன் பெறும் வகையில் ரூ.289.63 கோடி நிவாரணத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

