- Home
- Tamil Nadu News
- 2 நாள் தொடர் விடுமுறை.! பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட போக்குவரத்து துறை
2 நாள் தொடர் விடுமுறை.! பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட போக்குவரத்து துறை
Weekend holiday : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. சென்னை கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கம் மற்றும் பிற நகரங்களிலிருந்து அக்டோபர் 24, 25, 26 ஆகிய தேதிகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் தொடர்ந்து 4 முதல் 5 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இதனால் சொந்த ஊருக்கு சென்று தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். இந்த நிலையில் மீண்டும் நாளை முதல் 2 நாள் வார விடுமுறை கிடைக்கவுள்ளது. எனவே பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது. வளர்பிறை முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கவுள்ளது.
இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று 24/10/2025 (வெள்ளிக்கிழமை) முகூர்த்தம் 25/10/2025 (சனிக்கிழமை) மற்றும் 26/10/2025 (ஞாயிறுக் கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 24/10/2025 மற்றும் 25/10/2025 ஆகிய நாட்களுக்கு 120 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 24/10/2025 மற்றும் 25/10/2025 ஆகிய நாட்களுக்கு 40 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை. திருச்சி, கும்பகோணம், மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி. தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 24/10/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 365 பேருந்துகளும், 25/10/2025 (சனிக்கிழமை) 445 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 9,164 பயணிகளும் சனிக்கிழமை 8,575 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 16,108 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.