- Home
- Tamil Nadu News
- அரசு பணி நியமனத்துக்கு தலைக்கு ரூ.35 லட்சம்.! மொத்தம் ரூ.888 கோடி! திமுகவின் மெகா ஊழல்.! அண்ணாமலை!
அரசு பணி நியமனத்துக்கு தலைக்கு ரூ.35 லட்சம்.! மொத்தம் ரூ.888 கோடி! திமுகவின் மெகா ஊழல்.! அண்ணாமலை!
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்ற பணி நியமனங்களில் ரூ.888 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தலா ரூ.35 லட்சம் லஞ்சம் பெற்று 2,538 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மாபெரும் ஊழல்
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் இந்தாண்டு பணி நியமனங்கள் செய்யப்பட்டன. இதற்காக அண்ணா பல்கலை சார்பில் எழுத்துத்தேர்வும் நடத்தப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இந்தாண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த பணி நியமனத்தில் மாபெரும் ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பணி நியமனம் பெற்ற 2,538 பேரில் 150 பேர் தலா ரூ.35 லட்சம் லஞ்சம் கொடுத்து அரசு வேலை பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் திமுக அரசின் கீழ், நடந்த பெரிய மோசடிகள் மற்றும் முறையான ஊழல்கள் மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது என அண்ணாமலை கூறியுள்ளார்.
அண்ணாமலை
இதுதொடர்பாக தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஒன்றன் பின் ஒன்றாக ஊழல்களுக்கு உடந்தையாக மாறி இருக்கிறது. அமலாக்கத் துறை இப்போது மற்றொரு பெரிய மெகா ஊழலை அம்பலப்படுத்தி இருக்கிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு பணம் பெற்று கொண்டு நியமனங்கள் நடைபெற்று உள்ளன. 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற 2,538 பணி நியமனத்தில் தலா ரூ.35 லட்சம் என மொத்தம் ரூ.888 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளது.
ரூ.35 லட்சம் லஞ்சம்
2,538 பதவிகளுக்கு விண்ணப்பித்த 1.12 லட்சம் பேர்களில், கடினமாகப் படித்து, விடாமுயற்சியுடன் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான தகுதியான இளைஞர்களுக்கு ரூ.35 லட்சம் லஞ்சம் கொடுக்க முடியாமல் மறுக்கப்பட்டன. திமுக அரசின் தீராத பேராசை, இளைஞர்களின் கனவுகளையும், ஆசைகளையும் நசுக்கியது. முறைகேடாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தான் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி பணி நியமன ஆணைகளை வழங்கி இருக்கிறார்.
அமைச்சர் கே.என்.நேரு
நகராட்சி நிர்வாகத் துறைக்குள் ஆழமாக வேரூன்றிய ஊழல் மோசடியை அமலாக்கத்துறை அடையாளம் கண்டுள்ளது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் நிறுவனத்தின் வங்கி மோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது. திமுக அரசின் கீழ், நடந்த பெரிய மோசடிகள் மற்றும் முறையான ஊழல்கள் மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக பொறுப்பு ஏற்க வேண்டும். நீதித்துறை மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இதுவே மோசடிக்கு காரணமானவர்கள் பொறுப்பேற்கப்படுவதையும், தமிழக மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படுவதையும் உறுதி செய்ய முடியும் என அண்ணாமலை கூறியுள்ளார்.