- Home
- Tamil Nadu News
- மழைக்கு டைம் குறித்த வானிலை மையம்! சற்று நேரத்தில் 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுதாம்!
மழைக்கு டைம் குறித்த வானிலை மையம்! சற்று நேரத்தில் 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுதாம்!
தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பல இடங்களில் மழை பெய்யும்.

தென்மேற்கு பருவமழை
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதை அடுத்து கேரளா மற்றும் தமிழகத்தில் கேரளாவை ஓட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதை பார்ப்போம்.
கன முதல் மிக கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களிலும் தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் வானிலை நிலவரம்
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழை
இதனிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு அதாவது காலை 10 மணிவரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரியில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கும், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.