- Home
- Tamil Nadu News
- மோடியா இந்த லேடியா என சவால் விட்டவர் ஜெயலலிதா.!கடம்பூர் ராஜூக்கு எதிராக கொந்தளித்த ஓபிஎஸ்
மோடியா இந்த லேடியா என சவால் விட்டவர் ஜெயலலிதா.!கடம்பூர் ராஜூக்கு எதிராக கொந்தளித்த ஓபிஎஸ்
அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, பாஜக கூட்டணியைப் புகழ்ந்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் பாஜக கூட்டணி முறிவை 'வரலாற்றுப் பிழை' எனக் கூறியதற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடம்பூர் ராஜூ சர்ச்சை பேச்சு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், அதிமுக- பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பாஜக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 1998-ல் ஜெயலலிதா வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசைக் கவிழ்த்தது "வரலாற்றுப் பிழை" என்று பேசினார்.
சுப்பிரமணிய சுவாமியின் தவறான வழிகாட்டுதலால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இதனால் தி.மு.க. கூட்டணி 14 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்ததாகவும் கூறினார். இந்தக் கருத்து அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடம்பூர் ராஜூ பேச்சுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் விலகியது வரலாற்று பிழையா.?
முன்னாள் முதலைமச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கத்தை புரட்சித் தலைவரின் மறைவிற்குப் பின் நான்கு முறை, அதாவது இருபது ஆண்டு காலம் ஆட்சிக் கட்டிலில் அமைத்த பெருமைக்குரியவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உயர்த்திய பெருமையும் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு உண்டு. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் “இரட்டை இலை” சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அமைத்த பெருமைக்குரியவர் மாண்புமிகு அம்மா அவர்கள்.
கடம்பூர் ராஜூக்கு ஓபிஎஸ் கண்டனம்
இப்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உச்ச நிலைக்கு அழைத்துச் சென்ற மாண்புமிகு அம்மா அவர்களை குறை சொல்லும் விதமாக "பாஜக கூட்டணி முறிவு" என்ற வரலாற்று பிழையை மாண்புமிகு அம்மா அவர்கள் செய்துவிட்டார்கள் என்று மாண்புமிகு அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட கடம்பூர் ராஜூ அவர்கள் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
1999 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் நலன் கருதி மாண்புமிகு அம்மா அவர்கள் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியிலிருந்து விலகியதால்தான். 2001 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மாண்புமிகு அம்மா அவர்கள் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றார்கள். இந்த வரலாறு தெரியாமல் திரு. கடம்பூர் ராஜூ அவர்கள் பேசியிருப்பது அவரின் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மோடியா, இந்த லேடியா”
அம்மா அவர்கள் செய்தது வரலாற்றுப் பிழை அல்ல. அது ஒரு வரலாற்றுப் புரட்சி. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வழிவகுத்தது. ஆனால், மாண்புமிகு அம்மா அவர்களால் சட்டமன்ற உறுப்பினராக்கப்பட்ட, அமைச்சராக்கப்பட்ட திரு. கடம்பூர் ராஜு அவர்களின் பேச்சுதான் வரலாற்றுப் பிழை, "மோடியா, இந்த லேடியா” பார்த்துவிடலாம் என்று சவால்விட்டு,
37 தொகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற காரணமாக இருந்த மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை கடம்பூர் ராஜூ அவர்கள் குறை சொல்வதைப் பார்க்கும்போது “வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது” என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது. மாண்புமிகு அம்மா அவர்களை குறை சொல்வது என்பது "உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்வதைப் போன்றது.
கடம்பூர் ராஜூ பகிரங்க மன்னிப்பு கேட்கனும்
“ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது” மிகப் பெரிய துரோகம் என்பதை உணர்ந்து, தான் செய்த செயலுக்கு திரு. கடம்பூர் ராஜூ அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், இதற்குத் தக்க பாடத்தினை தமிழக மக்கள் புகட்டுவார்கள் என ஓ.பன்னீர் செல்வம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

