ஒரே ஆண்டில் 7வது முறை நிரம்பிய மேட்டூர் அணை! டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி!
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் ஏழாவது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதனால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதேபோல், காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதன் விளைவாக, மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை இன்று எட்டியுள்ளது. நடப்பு ஆண்டில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டுவது இது ஏழாவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி
இன்று காலை நிலவரப்படி, அணைக்கு வினாடிக்கு 14,420 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியிருப்பது டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் வட கடலோர மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய உள்மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.