அப்பாடா! இல்லத்தரசிகளுக்கு நிம்மதி! LPG டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்!
கடந்த 6 நாட்களாக நடந்து வந்த தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இனி சிலிண்டர்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

LPG டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்
தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரிகள் சங்கம் கடந்த 9ம் தேதி முதல் திடீரென காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. 2025-30 ஆம் ஆண்டுக்கான டேங்கர் லாரிகள் ஒப்பந்தத்தில் பல்வேறு புதிய விதிமுறைகளை ஆயில் நிறுவனங்கள் அறிவித்தன. எண்ணெய் சந்தை நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய ஏல முறையின் கீழ் 3,478 லாரிகளுக்கு மட்டுமே ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன.
முன்வைத்த கோரிக்கைகள் என்னென்ன?
ஆனால் தற்போது 5,514 லாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் 2,036 லாரிகள் ஒப்பந்தங்களை இழக்கும் நிலை உருவாகி, ஓட்டுநர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த ஏல விதிகளை ரத்து செய்து விட்டு பழைய ஏல விதிமுறைகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வந்தனர்.
சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு அபாயம்
எண்ணெய் நிறுவனங்கள் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் வேலைநிறுத்த போராடத்தை தொடர்ந்து வந்தனர். LPG லாரிகள் வேலை நிறுத்தத்தால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதற்கிடையே டேங்கர் லாரிகள் வேலை நிறுத்ததுக்கு தடை விதிக்க வேண்டும் என 3 எண்ணெய் நிறுவனங்கள் சென்னை உயர்நிதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன.
ஒப்பந்தத்தை நீட்டிக்க தயார்
அப்போது 'டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தால் பொதுமக்களுக்கு கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. புதிய டெண்டர் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. ஆகவே இப்போதைய ஒப்பந்தத்தை 2026ம் ஆண்டு வரை நீட்டிக்க தயாராக இருக்கிறோம். இந்த இடைப்பட்ட காலத்தில் டெண்டர் பணிகள் முடிக்கப்படும்' என்று எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
வேலை நிறுத்தம் வாபஸ்
எண்ணெய் நிறுவனங்களின் கருத்தை ஏற்றுக் கொண்ட தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரிகள் சங்கம் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. இதனால் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த இடைப்பட்ட காலத்தில் எந்த ஒரு வேலை நிறுத்தத்திலும் ஈடுபடக்கூடாது என்று டேங்கர் லாரி உரிமையாளர்களிடம் எச்சரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது.