- Home
- Tamil Nadu News
- DMK : திரிஷா பற்றி அசிங்கமான பேச்சு... சட்டென வந்த கோபம் - திமுக நிர்வாகியை லெஃப்ட் ரைட் வாங்கிய கனிமொழி..!
DMK : திரிஷா பற்றி அசிங்கமான பேச்சு... சட்டென வந்த கோபம் - திமுக நிர்வாகியை லெஃப்ட் ரைட் வாங்கிய கனிமொழி..!
Kanimozhi Issues Warning : தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக நிர்வாகி ஒருவர் திரிஷாவை பற்றி கொச்சையாக பேசியதை அடுத்து அவரை கனிமொழி மேடையிலேயே கண்டித்துள்ளார்.

Kanimozhi Issues Warning in DMK Meeting
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு திமுகவில் தீவிரமான உள்கட்டமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள கடுமையாக முயன்றிருந்தாலும், தேர்தல் முடிவில் கட்சி, எதிர்க்கட்சித் தரப்புக்கு தள்ளப்பட்டிருப்பது திமுகவுக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இதையடுத்து தோல்விக்கான காரணங்களை ஆராய மாவட்ட மற்றும் தொகுதி வாரியாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியை அமைத்துள்ள நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

திமுக நிர்வாகிகள் கூட்டம்
குறிப்பாக முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக குறித்து திமுக நிர்வாகிகள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த சூழலில், தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் புதிய சர்ச்சை ஒன்று எழுந்தது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். தேர்தல் தோல்வி குறித்து ஒவ்வொருவரும் தங்களது கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.
நிர்வாகியை எச்சரித்த கனிமொழி
அப்போது பேசிய ஒரு நிர்வாகி, நடிகை திரிஷா குறித்து தரக்குறைவான கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக குறுக்கிட்ட கனிமொழி, அந்த நிர்வாகியை கடுமையாக எச்சரித்தார். “எந்த பெண்ணைப் பற்றியும் அவதூறாக பேசக்கூடாது. நாம் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண்களை மரியாதையுடன் அணுக வேண்டும். தரக்குறைவான கருத்துகளுக்கு இடமில்லை,” என்று அவர் மேடையிலேயே அறிவுறுத்தினார்.
கனிமொழி பேசியது என்ன?
மேலும் கூட்டத்தில் பேசிய கனிமொழி, “நாம் கட்சியை வலுப்படுத்திக் கொண்டால் கூட்டணி இல்லாமல்கூட வெற்றி பெற முடியும். திமுகவின் தனிப்பட்ட பலத்தை மீண்டும் நிரூபிக்க வேண்டிய நேரம் இது. தூத்துக்குடியில் திமுக தோல்வி அடைந்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம். கீதா ஜீவன் அமைச்சராக இருந்தவர் என்பதைத் தாண்டி அவர் மக்களோடு மக்களாக பணியாற்றியவர். கள ஆய்வு நடத்தி உண்மை நிலவரங்களை நிர்வாகிகளிடம் சொல்ல வேண்டும் ” எனக் கனிமொழி, நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார்.

