- Home
- Tamil Nadu News
- மகளிர் உரிமைத் தொகை.. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரூ.1,000 எப்போது? தேதியை அறிவித்த உதயநிதி!
மகளிர் உரிமைத் தொகை.. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரூ.1,000 எப்போது? தேதியை அறிவித்த உதயநிதி!
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை வேண்டி புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 15ம் தேதி முதல் ரூ.1,000 வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை
தமிழக அரசு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டம் என்ற பெயரில் குடும்ப அட்டை வைத்துள்ள மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கி வருகிறது. இந்த 1,000 ரூபாய் தகுதியான பெண்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் மாதம்தோறும் செலுத்தப்பட்டு வருகிறது.
அரசு ஊழியர்கள், அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், குறிப்பிட்ட நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோரைத் தவிர மற்ற குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
புதிதாக விண்ணப்பித்த மகளிர்
இதற்கிடையே புதிதாக ரேஷன் கார்டு வாங்கியவர்கள், தளர்வுகள் அறிவிக்கப்படவர்கள் என ஏராளமானோர் புதிதாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தனர். புதிதாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நடந்து கொண்டிருப்பதால் அவர்கள் தங்களுக்கு எப்போது மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.
உதயநிதி குஷியான அறிவிப்பு
இந்நிலையில், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய உதயநிதி, ''தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 26 மாதங்களாக ஒவ்வொரு மகளிருக்கும் சுமார் 26,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
புதிய விண்ணப்பங்கள் எத்தனை?
இதுவரை மொத்தமாக கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய் மகளிர் உரிமைத்தொகை தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் பெண்கள் மகளிர் உதவித்தொகை பெறும் வகையில் முதல்வர் இந்த திட்டத்தில் சில விதிகளை தளர்த்தினார். புதிதாக மகளிர் உரிமைத் தொகை வேண்டி 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் சுமார் 28 லட்சம் மகளிர் விண்ணப்பங்களை அளித்தனர்.
டிசம்பர் 15ம் தேதி முதல் ரூ.1,000 கிடைக்கும்
புதிதாக மகளிர் உரிமைத் தொகை கோரிய விண்ணப்பங்கள் வருவாய்த்துறை மூலமாக பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் நவம்பர் 30ம் தேதிக்குள் முடிவடையும். புதிதாக பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதியான மகளிருக்கு டிசம்பர் 15ம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்'' என்று தெரிவித்தார்.