- Home
- Tamil Nadu News
- பழைய ஓய்வூதியம், சரண் விடுப்பு.! 110 விதியில் வெளியாகுமா.? எதிர்பார்த்து காத்திருக்கும் ஜாக்டோ ஜியோ
பழைய ஓய்வூதியம், சரண் விடுப்பு.! 110 விதியில் வெளியாகுமா.? எதிர்பார்த்து காத்திருக்கும் ஜாக்டோ ஜியோ
திமுக அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

JACTO Geo Protest : அரசு ஊழியர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். திமுக அரசு ஆட்சி அமைத்து 4 ஆண்டுகள் முடிவடையவுள்ள நிலையில், தங்களது கோரிக்கைகளை செயல்படுத்தாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வரும் அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் அமைப்பு அதிருப்தியில் உள்ளது.
இந்த நிலையில் தான் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மாதம் அமைச்சர்களை கொண்ட குழு அமைத்தார். இந்த குழு அரசு ஊழியர்கள் சங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில்,
அரசு ஊழியர்களின் கோரிக்கை
பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தினை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வுதியத் திட்டத்தினை அமுல்படுத்திட வேண்டும், சரண்விடுப்பு சலுகை மீண்டும் வழங்கிட வேண்டும், தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கு வழங்கிய 7-வது ஊதிய குழு நிர்ணயத்தில் 21 மாத நிலுவைத்தொகையினை பணியாளர்களுக்கு வழங்காமல், நிலுவையாக உள்ளதால், அதனை விடுவித்து 21 மாத நிலுவைத் தொகையினை வழங்கிட வேண்டும் என்ன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வைத்தது. இதன் படி பட்ஜெட் கூட்டத்தொடரில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என காத்திருந்தது.
பழைய ஓய்வூதிய திட்டம்
ஆனால் அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு வெளியாகவில்லை. அரசு ஊழியர்களுக்கு சரண் விடுப்பு சலுகையானது அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதனால் அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு தேதி குறித்தனர். தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். சரண் விடுப்பு குறித்து தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை வஞ்சிக்கும் செயலாகும் என விமர்சித்தனர்.
அடுத்த கட்ட போராட்டம் எப்போது.?
கடந்த 4 ஆண்டுகளில் முதல்வரை 7 முறை சந்தித்துள்ளோம். இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்தனர். எனவே தமிழக அரசு வருகிற 30ஆம் தேதிக்குள் அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பை 110 விதியின் கீழ் வெளியிடும் என எதிர்ப்பார்ப்பதாக கூறினர். இல்லையெனில் எங்கள் உயர்மட்டக்குழு மார்ச் 30-ம் தேதி கூடி அடுத்தகட்ட போராட்டத்தை அறிவிக்கும் என அரசு ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.