- Home
- Tamil Nadu News
- அதிமுகவை உடைக்க காத்திருக்கும் கொங்கு டீம்.? ஒற்றை ஆளாக தவிக்கும் எடப்பாடி- நடப்பது என்ன.?
அதிமுகவை உடைக்க காத்திருக்கும் கொங்கு டீம்.? ஒற்றை ஆளாக தவிக்கும் எடப்பாடி- நடப்பது என்ன.?
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொங்கு மண்டல நிர்வாகிகள் அணி திரள்வதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஜெயலலிதா தலைமையின் கீழ் அதிமுக இருந்த வரை முழு கட்டுப்பாட்டோடு இரும்பு கோட்டையாக இருந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடைபெறுவதெல்லாம் புரியாத புதிராக உள்ளது. ஜெயலலிதாவின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு இருந்தவர்கள் தற்போது தான் தான் அதிமுகவின் தலைவர்கள் என கொடி பிடித்து வருகிறார்கள். இதன் காரணமாக பல பிளவுகளாக அதிமுக பிரிந்துள்ளது. எனவே கடந்த 8 வருடங்களில் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுகவிற்கு வெற்றி என்பதே கிடைக்காமல் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் மற்றும் பிரிவுகளே.
அதிமுகவில் தொடரும் உட்கட்சி மோதல்
எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் அதிமுகவை கைப்பற்றிய நிலையில், அவரிடம் இருந்து மீட்க தனித்தனி அணியாக ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா முயன்று வருகிறார்கள். இதனால் தேர்தல்களில் வாக்குகள் பிரிந்து எதிர்கட்சிகள் வெற்றியை எளிதாக பறித்து விடுகிறது.
எனவே அனைத்து தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும் என நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை எதிர்பார்த்துள்ளனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ ஒற்றை தலைமை மட்டுமே என்ற பிடிவாதமாக உள்ளார். அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை இணைக்க வாய்ப்பில்லையென கூறிவருகிறார்.
பாஜகவுடன் கூட்டணிக்கு எதிர்ப்பு ஆதரவு
இதனிடையே அதிமுகவிலேயே தற்போது கொங்கு டீம் ஒரு பக்கமும், வட மாவட்ட டீம் ஒரு பக்கமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என ஒரு சில தலைவர்களும், பாஜக கூட்டணி தான் தோல்விக்கு முக்கிய காரணம் என ஒரு பிரிவும் கூறி வருகிறது.
மேலும் பிரிந்து சென்ற தலைவர்களை இணைக்க வேண்டும் என ஒரு பிரிவும், இணைப்பு தேவையில்லை எடப்பாடி தலைமையே ஓகே என ஒரு பிரிவும் கூறி வருகிறது. இதனால் குழப்பமான நிலையே நீடிக்கிறது. இதனிடையே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொங்கு மண்டலத்தை சார்ந்த நிர்வாகிகள் தனி அணியாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இபிஎஸ்க்கு எதிராக தனி அணி.?
அதன் படி, அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் எடப்பாடிக்கு எதிராக களம் இறங்கியுள்ளார். எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வந்தார். இதனிடையே வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்து போட்டியிட பாஜக விரும்புகிறது. ஆனால் இதற்கு எதிராக உள்ள எடப்பாடி பழனிசாமியை கழட்டி விட்டு எஸ்.பி.வேலுமணி அல்லது செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவை உருவாக்கி கூட்டணி அமைக்க பாஜக திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி வீட்டு திருமண நிகழ்வுகளில் அதிமுகவின் கொங்கு மண்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில், செங்கோட்டையன், தங்கமணி, செ.ம.வேலுச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர் .
கொங்கு மண்டலத்தில் உருவாகும் தனி அணி
இது மட்டும் இல்லாமல் திருமண நிகழ்வில் பாஜக முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்திய நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி எங்கே என கேள்வியானது எழுப்பப்பட்டு வருகிறது. எனவே எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து அதிமுகவை உடைக்க கொங்கு மண்டலத்தில் தனியாக டீம் உருவாகியுள்ளதாக அரசியல் விமர்சர்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி வீட்டு திருமண விழாவில் எடப்பாடி கலந்து கொள்ளாததன் காரணம் தொடர்பாக அதிமுகவினர் கூறுகையில்,
எஸ்.பி வேலுமணி திருமண நிகழ்வு- இபிஎஸ் பங்கேற்பு
எஸ்.பி.வேலுமணி தனது மகன் திருமண நிகழ்வு நேற்று நடைபெற்றாலும், வருகிற திங்கட்கிழமை 10ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்வு நடத்த இருப்பதாகவும் அந்த நிகழ்வில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள இருப்பதாக கூறுகின்றனர். எனவே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எந்த அணியும் இல்லையென உறுதிபட தெரிவிக்கின்றனர்.