ரயில் டிக்கெட் கட்டண உயர்வு ஜூலை 1 முதல் அமல்
ஜூலை 1 முதல் 500 கி.மீட்டருக்கு மேல் பயணிக்கும் ரயில் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் சிறிதளவு உயரும். குறுகிய தூரப் பயணங்கள் மற்றும் புறநகர் வழித்தடங்களில் கட்டண உயர்வு இருக்காது.

இந்திய ரயில்வே துறை வரும் ஜூலை 1 ஆம் தேதி (நாளை) முதல் ரயில் டிக்கெட் கட்டணத்தில் சிறிய அளவில் மாற்றம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, 500 கி.மீட்டருக்கும் அதிகமான தூரம் பயணிப்பவர்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறுகிய தூரப் பயணங்கள் மற்றும் புறநகர் வழித்தடங்களில் ரயில் டிக்கெட் கட்டணம் உயரப் போவதில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இரண்டாம் வகுப்பில் 500 கி.மீட்டர் வரையிலான தொலைவுக்குப் பயணம் செய்பவர்களுக்கு டிக்கெட் கட்டண உயர்வு இருக்காது. சாதாரண வகுப்பில் 500 கி.மீட்டர் வரை பயணிப்போருக்கும் ரயில் டிக்கெட் உயர்வு இல்லை.
இருப்பினும், 500 கி.மீட்டருக்கும் மேல் பயணிப்போருக்கு டிக்கெட் உயர்வு இருக்கும். ஏசி அல்லாத ரயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கு, ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா என்ற விகிதத்தில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதாவது, 500 கி.மீட்டருக்கும் மேலான பயணத்தில், ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசா என்ற விகிதத்தில் கணக்கிட்டு கட்டணம் உயர்த்தப்படும். உதாரணமாக, 1,000 கி.மீட்டர் தூரப் பயணத்திற்கான டிக்கெட் கட்டணம் முன்பு இருந்ததை விட ரூ.10 அதிகரிக்கும்.
இந்தக் கட்டண உயர்வு வரும் ஜூலை 1 ஆம் தேதி (நாளை) முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் கட்டண உயர்வு சிறிய அளவில் மட்டுமே மாற்றம் ஏற்படுவதால் பயணிகளைப் பெரிய அளவில் பாதிக்காது என்று ரயில்வே அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

