- Home
- Tamil Nadu News
- விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி.! உடனே இதை செய்யுங்க - வெளியான அரசின் முக்கிய அறிவிப்பு
விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி.! உடனே இதை செய்யுங்க - வெளியான அரசின் முக்கிய அறிவிப்பு
தமிழக அரசு செயல்படுத்தும் சிறப்புத் திட்டங்களால் குறுவை நெல் சாகுபடி வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளது. மேட்டூர் அணை நீர் இருப்பு மற்றும் அரசின் தொடர் நடவடிக்கைகளால் சம்பா, தாளடி சாகுபடி இயல்பு பரப்பை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகளுக்கான திட்டங்கள்
விவசாயத்திற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் குறுவை, சம்பா மற்றும் தாளடி பருவங்களில் நெல் சாகுபடி குறித்து வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியினை அதிகரிக்கவும்,
வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தவும் தமிழ்நாடு அரசு பல்வேறு மானியங்கள் வழங்குவதுடன், சாகுபடிக்குத் தேவையான இடுபொருட்களான விதைகள், உரங்கள், உயிர் உரங்கள், பயிர்பாதுகாப்பு மருந்துகள் தங்குதடையின்றி உரிய காலத்தில் கிடைத்திடவும் உறுதி செய்கிறது.
தமிழகத்தில் குறுவை சாகுபடி
செயல்படுத்தியது போன்றே நடப்பு ஆண்டிலும் "குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம்" 82 கோடியே 77 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், தமிழ்நாட்டில் முதன்முறையாக கார்/ குறுவை/சொர்ணவாரி பருவத்திற்கான "சிறப்புத் தொகுப்புத் திட்டம்" 132 கோடியே 17 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் டெல்டா அல்லாத மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. மேலும், டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி அதிக பரப்பில் மேற்கொள்ள மேட்டூர் அணை பாசனத்திற்காக ஜூன் 12ஆம் தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறக்கப்பட்டது.
தமிழகத்தில் சாகுபடி அதிகரிப்பு
இவ்வாறு தமிழ்நாடு எடுத்த சீரிய நடவடிக்கைகளால் முன் எப்போதும் இல்லாத வகையில் 2025ஆம் ஆண்டு குறுவைப்பருவத்தில் 6.13 இலட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது 2024ஆம் ஆண்டை விட 2.25 இலட்சம் ஏக்கர் அதிகமாகும். இந்நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறுவை நெல் சாகுபடி பரப்பு குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது.
தற்போது, டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் அறுவடை முழுவீச்சில் நடைபெறுவதால், சம்பா நெற்பயிர் சாகுபடி அடுத்த பத்து தினங்களில் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுநாள்வரை, சம்பா பருவ நெற்பயிர் சாகுபடி 2.64 இலட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே வேளையில் 5.50 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
டெல்டா மாவட்டங்களில் விவசாயம்
இந்த ஆண்டு. குறுவை பருவத்தில் அதிகப்பரப்பில் நெல்சாகுபடி மேற்கொள்ளப்பட்டதாலும், சாதகமான சூழ்நிலை நிலவியதால் இயல்பாக சம்பா பருவ நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள், குறுவை சாகுபடி மேற்கொண்டதாலும், தற்போதுவரை குறுவை நெல் அறுவடை 52 சதவீதம் மட்டுமே செய்யப்பட்டிருப்பதாலும்,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர் மழை இருப்பதாலும் சம்பா நெல் சாகுபடி தாமதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பரப்பான 6.13 இலட்சம் ஏக்கரில் 80 சதவீத பரப்பில் அதாவது சுமார் 5 இலட்சம் ஏக்கரில் தாளடி பருவ நெல் சாகுபடி எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பா நெல் சாகுபடி விதை
மேலும், தற்போது 5,438 ஏக்கரில் நெல் நாற்றங்கால் தயார் நிலையில் உள்ளதாலும், மேட்டூர் அணையில் பாசனத்திற்கு போதிய நீர் இருப்பு (83:14 டி.எம்.சி) உள்ளதாலும், வடகிழக்கு பருவமழை பரவலாக பல்வேறு பகுதிகளில் பெய்துவருவதாலும், மத்திய மற்றும் நீண்டகால நெல் இரக விதைகள், போதுமான அளவில் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு உள்ளதாலும்,
சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி இயல்பு பரப்பான 13 இலட்சம் ஏக்கருக்கும் கூடுதலாக மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளவிருக்கும் விவசாயிகள் அனைவரும் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளுமாறும், விதை தேவைக்கு அருகாமையிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.