- Home
- Tamil Nadu News
- சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுதாம்! வானிலை மையம் அதிர்ச்சி ரிப்போர்ட்!
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுதாம்! வானிலை மையம் அதிர்ச்சி ரிப்போர்ட்!
தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் இன்றும் நாளையும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. நீலகிரி, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
சென்னையில் இன்றும் நாளையும் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வடதமிழகம் புதுவை தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம். மெதுவாக தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று வடதமிழக - புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறைந்து, இன்று காலை அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுக்குறையக்கூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று கன முதல் மிக கனமழை எச்சரிக்கை
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம். கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் அவ்வப்பொழுது பலத்த தரைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
அதேபோல் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழகத்தில் 5ம் தேதி அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கனமழை எச்சரிக்கை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். பொதுவாக வெப்பநிலை 24-26° செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

