23 மாவட்டங்களில் மழை வெளுக்கப்போகுது.! தேதி குறித்த சென்னை வானிலை மையம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் அடுத்த கட்டம் தொடங்கவுள்ளது. சென்னை முதல் டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள் வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Tamil nadu rains
அடுத்த ஆட்டம் ஆரம்பம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் அடுத்த கட்டம் நாளை தொடங்கவுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் சென்னை முதல் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கன மழை பெய்யவுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (09-12-2024) அதே பகுதியில் நிலவுகிறது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுவடையக்கூடும். மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 11-ஆம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை - தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும்.
tamilnadu rain
இடி மின்னலோடு மழை
நாளை (10-12-2024 ) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
tamilnadu rain
15 மாவட்டங்களில் கன மழை
நாளை மறுதினம் (11-12-2024) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், கடலூர், மயிலாடுதுறை. நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு. காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
tamilnadu rain
23 மாவட்டங்களுக்கு மழை
இதனையடுத்து வருகிற 12 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,
நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
tamilnadu rain
4 நாட்கள் தொடரும் கன மழை
13-12-2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.