- Home
- Tamil Nadu News
- TN Rain Aert : 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. மழை கொட்டப்போகுது.. மக்கள் கவனிக்க வேண்டிய அப்டேட்!
TN Rain Aert : 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. மழை கொட்டப்போகுது.. மக்கள் கவனிக்க வேண்டிய அப்டேட்!
TN Rain Aert : தமிழகத்தில் கோடை வெயில் உச்சத்தில் இருந்தாலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

11 மாவட்டங்களில் கனமழை
தமிழகத்தில் கோடை வெயில் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், வானிலையில் திடீர் மாற்றம் உருவாகியுள்ளது. வெப்பம் அதிகரிக்கும் சூழலிலும், பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மழை மற்றும் வெப்பம் இணைந்த வானிலை நிலை உருவாகும் சாத்தியம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வானிலை மையம் அலர்ட்
வானிலை ஆய்வு நிபுணர்கள் கூறுவதன்படி, வட தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேலடுக்கு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. மேலும் வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் மேலடுக்கு சுழற்சி தொடர்வதால், தமிழகத்தில் மேகமூட்டம் மற்றும் மழைச் செயல்பாடுகள் அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
வானிலை அப்டேட்
செவ்வாய்க்கிழமை பதிவான வெப்பநிலை கணக்குகளில் வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 41.5 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை பதிவு செய்தது. சமவெளி பகுதிகளில் தர்மபுரி குறைந்தபட்சமாக 23 டிகிரி, மலைப்பகுதிகளில் உதகமண்டலம் 13.2 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. வெப்பநிலை உயர்ந்திருந்தாலும், வளிமண்டல மாற்றங்கள் காரணமாக மழை வாய்ப்பு உருவாகியுள்ளதாக நிபுணர்கள் விளக்குகின்றனர்.
சென்னையில் வானிலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு மேகமூட்டமான வானிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடையிடையே காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வெப்பமும் ஈரப்பதமும் கலந்த வானிலை நிலை நீடிக்கலாம்.
இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களாக நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் தனித்தனியாக சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், பொதுமக்கள் வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

