- Home
- Tamil Nadu News
- நாமக்கலில் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவர்கள் உயிரிழப்பா? நடந்தது என்ன? ஆக்ஷனில் மாவட்ட காவல்துறை!
நாமக்கலில் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவர்கள் உயிரிழப்பா? நடந்தது என்ன? ஆக்ஷனில் மாவட்ட காவல்துறை!
நாமக்கல் எக்ஸல் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்டு 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். மாணவர்கள் உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவிய நிலையில், அனைவரும் நலமாக இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

எக்ஸல் தனியார் பொறியியல் கல்லூரி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் இயங்கி வரக்கூடிய எக்ஸல் தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் கடந்த 27ம் தேதியன்று இரவு உணவு அருந்திய சுமார் 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கம் காரணமாக தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதில் நலமாக இருப்பதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.
தவெக போக்கிரி விக்டர்
இந்நிலையில் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்டு சிகிச்சையில் இருந்த 5 மாணவர்கள் உயிரிழந்து விட்டதாக சில சமூக வலைத்தளங்களில் வெளியானது. குறிப்பாக தவெக சமூக ஊடக அணி பொறுப்பாளர் போக்கிரி விக்டர் என்பவரின் எக்ஸ் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நாமக்கல் மாவட்ட காவல் துறை விசாரித்து வருகிறது .
நாமக்கல் மாவட்ட காவல் துறை
இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்டம், குமாரபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்ஸல் குழும கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 27ம் தேதி திங்கட்கிழமை காலை சில மாணவர்கள் வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அவர்களில் சில மாணவர்கள் எக்செல் கல்லூரி மருத்துவ மையம் மற்றும் குமாரபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் புறநோயாளிகளாக (OP) சிகிச்சை பெற்று உடல்நிலை சீரானதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கல்லூரி விடுமுறையை தொடர்ந்து தங்களது சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்றுவிட்டனர்.
சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை
மாணவர்கள் அனைவரும் உடல்நலத்துடன் உள்ள நிலையில் அவர்களில் சிலர் இறந்துவிட்டதாக சமூக விரோதிகள் சிலர் சமூகத்தில் பதற்றத்தையும் மற்றும் சட்ட ஒழுங்கு "Pokkiri Victor (@Pokkiri_Victor)" மற்றும் "Phoenix Vignesh (@PhoenixAdmk) என்ற எக்ஸ் வலைதலங்களில் தவறான தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில், குமாரபாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இதுபோன்று சமூக வலைதளங்களில் தவறான தகவல் பதிவேற்றம் செய்வோர் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.