- Home
- Tamil Nadu News
- தமிழ்நாடே பார்த்து கலங்குது.! இன்னும் 8 மாதங்கள் தான்.. ஸ்டாலினுக்கு தேதி குறித்த எடப்பாடி
தமிழ்நாடே பார்த்து கலங்குது.! இன்னும் 8 மாதங்கள் தான்.. ஸ்டாலினுக்கு தேதி குறித்த எடப்பாடி
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து போலீசார் போராட்டக்காரர்களைக் கைது செய்தனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்
சென்னையில் ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளில் தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் முடிவை மாநகராட்சி எடுத்துள்ளது. இதன் காரணமாக பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களின் பணி நிரந்தரம் மற்றும் ஊதியம் பாதிக்கப்படும் என்ற அச்சம் தெரிவித்துள்ளனர்.
எனவே ஊதியம், பணி நிரந்தரம், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சிக்கு முன்பாக தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து போராட்டக்காரர்களோடு அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் பல கட்ட பேச்சுவார்த்தையிலும் சுமூக முடிவு எடுக்கப்படவில்லை.
தூய்மை பணியாளர்கள் கைது
இந்த நிலையில் சென்னையின் முக்கிய இடமாக மாநாகராட்சிக்கு முன்பாக போராட்டம் நடத்தக்கூடாது என தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் போராட்டக்காரர்களை அந்த இடத்தில் இருந்து அகற்ற உத்தரவிட்டது.இதனையடுத்து நேற்று இரவு 100க்கும் மேற்பட்ட போலீசார் போராட்டக்கார்ர்களை கைது செய்து சமுதாய கூடத்தில் அடைத்தனர். இந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வணக்கம் திரு. ஸ்டாலின் அவர்களே... ரிப்பன் மாளிகை வாசலில், நள்ளிரவில் அடக்குமுறையை ஏவி , கொரானவின் போது கூட நம் குப்பைகளை நீக்கி சுத்தம் செய்த தூய்மை பணியாளர்களை அடித்து நொறுக்கி , அங்கிருந்து அகற்றி பல்வேறு இடங்களில் சிறை வைத்துள்ளனர் உங்கள் ஏவல்துறை.
ஸ்டாலினுக்கு இபிஎஸ் கண்டனம்
யார் அவர்கள்? சமூக விரோதிகளா? குண்டர்களா? நக்சலைட்டுகளா? இல்லையே. ஏழை எளிய மக்கள்! அன்றாடம் தூய்மைப் பணி செய்து, சென்னை மாநகரை சுத்தமாக வைத்திருந்தவர்கள். நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அதற்கு நேர்மாறாக செயல்பட்டத்தைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் அறவழியில் போராடியது ஒரு தவறா?
அவர்களோடு டீ, காபி அருந்தியது போல் போட்டோஷூட் எடுத்துக்கொண்டீர்களே... அப்போது மட்டும் இனித்தது? இப்போது நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் கேட்கும் போது கசக்கிறதா? எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் இருந்தபோது எழுதிய கடிதங்களில் , எந்த வழக்கு இருந்தாலும், இவர்கள் பணி நிரந்தரம் செய்யுங்கள் என்று நாடகமாடினேரே, நினைவில் இருக்கிறதா?
இன்னும் 8 மாதங்கள் தான் இருக்கு
"நள்ளிரவில் அடாவடித்தனமாக , வலுக்கட்டயாமாக நம் அரசுக்கும் மக்களுக்கும் பணி புரியும் , நலிவடைந்த தூய்மை பணியாளர்கள் மீது 79 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இது போன்ற ஒரு அடக்குமுறையை எந்த அரசும் ஏவியதில்லை. தூய்மை பணியாளர்கள் 8 க்கும் மேற்பட்ட இடத்தில் சிறை வைக்கபட்டுள்ளார்கள் , அவர்கள் உடனடியாக விடுதலை செய்ய பட வேண்டும் எனவும் ,
இந்த அடாவடி நடவடிக்கைகளால் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் வலியுறுத்துகிறேன். தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரை, வலியை, வேதனையை தமிழ்நாடே பார்த்து கலங்குகிறது. அவர்கள் சிந்திய ஒவ்வொரு கண்ணீருக்கும் நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். சொல்ல வேண்டிய காலம் அவ்வளவு தூரமெல்லாம் இல்லை. இன்னும் 8 மாதங்கள் தான் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.