- Home
- Tamil Nadu News
- மக்களின் வலியையும், உணர்வையும் புரிந்துகொள்ள முடியாதா? அஸ்தியை கரைப்பதுபோல் மனுவை... ஆவேசத்தில் இபிஎஸ்!
மக்களின் வலியையும், உணர்வையும் புரிந்துகொள்ள முடியாதா? அஸ்தியை கரைப்பதுபோல் மனுவை... ஆவேசத்தில் இபிஎஸ்!
சிவகங்கை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட முகாம்கள் வைகை ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், இச்சம்பவத்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள்
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம், மக்கள் குறை உடனுக்குடன் நிவர்த்தி செய்ப்படும் எனக்கூறி இந்த விடியா அரசால் வாங்கப்பட்ட மனுக்கள், இன்று சிவங்கங்கை வைகை ஆற்றில் குப்பையாக கொட்டப்பட்டுள்ளதற்கு, எனது கடும் கண்டனங்கள்.
கறுப்பு பெட்டியில் மனுக்கள்
எதிர்க்கட்சியாக இருந்த போது ஊர் ஊராக சென்று பொதுமக்களிடமிருந்து வாங்கிய மனுக்கள், கறுப்பு பெட்டிகளில் இன்னும் பூட்டப்பட்டுள்ளது, சாவியை காணவில்லை.
நீட் ஒழிப்பு வாக்குறுதி கொடுத்து ஆளுங்கட்சியான பிறகு கூட வெற்று நீட் ஒழிப்பு மாநாடு நடத்தி மாணவர்களிடம் வாங்கிய கையெழுத்து படிவங்களை கூட காற்றில் பறக்க விடப்பட்டு குப்பையாக்கப்பட்டது.
விளம்பரத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டம்
உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் விடியா திமுக அரசு விளம்பரத்திற்காக ஆரம்பித்த திட்டத்தின் மனுக்கள் இன்று அஸ்தியை கரைப்பது போல, சிவங்கங்கை வைகையாற்றில் மீண்டும் குப்பை ஆக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்கு உரியது.
மக்களின் வலிகளை , உணர்வுகளை, வேதனைகளை புரிந்து கொள்ள இயலாமல் , அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது போல் நாடகமாடி , உங்களுடன் ஸ்டாலின் என்ற கண்துடைப்பு நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்த இந்த விடியா அரசிற்கு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.