- Home
- Tamil Nadu News
- அடிதூள்! அரசு ஊழியர்களுக்கு காலையிலேயே ஹேப்பி நியூஸ்! தமிழ்நாடு அரசின் சரவெடி அறிவிப்பு!
அடிதூள்! அரசு ஊழியர்களுக்கு காலையிலேயே ஹேப்பி நியூஸ்! தமிழ்நாடு அரசின் சரவெடி அறிவிப்பு!
ஓய்வு பெறும் நாளில் அரசு ஊழியர்களை தற்காலிக பணி நீக்கம் செய்யும் நடைமுறைக்கு மாற்றாக புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் இருந்தாலும் விசாரணை முடியும் வரை பணப்பலன்கள் நிறுத்தி வைக்கப்படும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்யக்கூடாது என கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இதனை பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் நடைமுறை தவிர்க்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக மனிதவள மேலாண்மைத் துறை வெளியிட்டிருந்த அரசாணையில், அரசு ஊழியர்கள் தவறு செய்து அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு, தண்டனை வழங்கப்படுகிறது. சில வழக்குகளில் தவறு செய்பவர் மீதான விசாரணை நீண்டகாலம் செல்லும்போது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிககைக்காக அவர் தற்காலிக இடைநீக்கத்தில் (சஸ்பெண்ட்) வைக்கப்படுகிறார்.
இந்நிலையில் விசாரணையில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கதமிழக அரசு சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி அதன்படி, துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் முன்னர், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மீதான குற்றச்சாட்டுக்களில் முகாந்திரம் உள்ளதா, மிகப்பெரிய தண்டனை, குறிப்பாக பணி நீக்கம் செய்வதற்கு உரியதா என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும். இதன் மூலம், தேவையற்ற தாமதம் தவிர்க்கப்படும். அரசு ஊழியர் ஒருவர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தால், ஓய்வு பெறும் நாளில் பணியிடைநீக்கம் செய்வதை தவிர்த்து, 3 மாதங்களுக்கு முன்னதாகவே உரிய முடிவை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் ஓய்வு பெறுவதைக் கருத்தில்கொண்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டில் உரிய விளக்கத்தை அளிக்க வாய்ப்பு கொடுத்து, இயற்கை நியதிக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓய்வு பெறுவதற்கு முன்னரே அதாவது 3 மாதங்களுக்கு முன்னரே துறை ரீதியான நடவடிக்கைகளை முடிக்க வேண்டும். அவ்வாறு முடிக்க இயலாத பட்சத்தில், நடவடிக்கையில் நிர்வாகரீதியான தாமதத்தைக் கருத்தில்கொண்டு அந்த அரசு ஊழியரை ஓய்வுபெற அனுமதிக்க வேண்டும். இந்த அறிவுறுத்தல்கள் அனைத்தும் லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை, குற்ற வழக்குகளுக்குப் பொருந்தாது என தெரிவித்திருந்தது.
ஆனாலும் ஓய்வுபெறும் நாளில் இடைநீக்கம் செய்யும் நடைமுறை தொடர்ந்து வருகிறது. இது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்படுவதை தவிர்க்க, விதிகளை திருத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் நடவடிக்கை கிடையாது. குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் உரிய தேதியில் ஓய்வுபெற அனுமதிக்கப்படுவார்கள், ஆனால், குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை முடிந்தபிறகே பணப்பலன்களை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.