கூட்டணிக்கு வடிவம் கொடுத்த பியூஸ் கோயலுக்கு தடல் புடல் விருந்து வைத்த இபிஎஸ்
பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் தடல் புடல் விருந்து அளித்து வருகிறார். இந்த நிகழ்வின் போது தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

அதிகரிக்கும் NDA பலம்
தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தலை சந்திக்கிறது. கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என்றாலும் அமமுக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வருவதில் அதிமுகவுக்கு சில சங்கடம் இருந்து வந்தது. ஆனால் அந்த சங்கடத்தை பாஜக நேர்த்தியாகக் கையாண்டு கூட்டணிக்கு பலம் சேர்த்துள்ளது.
மீண்டும் NDAவில் தினகரன்
எடப்பாடி பழனிசாமி ஒரு துரோகி அவரை ஒருபோதும் நாங்கள் முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரை சொல்லி வந்த டிடிவி தினகரனை கூட்டணிக்குள் கொண்டு வந்ததில் பாஜகவின் பங்கு மிக முக்கியமானது. டிடிவி தினகரனின் வருகையால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கூடுதல் பலம் சேர்ந்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி
தற்போதைய சூழலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, அன்புமணி பாமக, அமமுக, இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி
நாளை சென்னை அருகே நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். பிரதமர் கலந்துகொள்ளும் மாநாட்டில் கூட்டணிக்கட்சி தலைவர்களை மேடையேற்றும் பணியை பாஜக தலைவர்கள் மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாகவே கூட்டணியை பலப்படுத்தும் பணியை பாஜக தலைவர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
தடல் புடல் விருந்து..
இதனிடையே பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் தடல் புடல் விருந்து வைக்கிறார். சென்னை பசுமைவழிச்சாலையில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அதே போன்று அதிமுக மூத்த நிர்வாகிகளான வேலுமணி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
விருந்து நிகழ்வைத் தொடர்ந்து பழனிசாமி, பியூஸ் கோயல் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

