- Home
- Tamil Nadu News
- போடா முட்டாப் பயலே... யாரைப் பார்த்து டா சொல்ற ராஸ்கல்- மேடையிலேயே மோதிக்கொண்ட திமுக எம்பி, எம்எல்ஏ- தேனியில் ஷாக்
போடா முட்டாப் பயலே... யாரைப் பார்த்து டா சொல்ற ராஸ்கல்- மேடையிலேயே மோதிக்கொண்ட திமுக எம்பி, எம்எல்ஏ- தேனியில் ஷாக்
தேனி மாவட்டம் ஜக்கம்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழாவில், திமுக எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் எம்எல்ஏ மகாராஜன் ஆகியோர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதலால் நிகழ்ச்சி பரபரப்பாக முடிவுக்கு வந்தது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா ஜக்கம்பட்டி இந்து மேல்நிலைப் பள்ளியில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் , திமுக தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் , ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன்,பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் முதற்கட்டமாக கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கினார்கள்.அதன் தொடர்ச்சியாக கட்டுமான நல வாரியத்தில் சார்பில் விபத்து நிவாரண தொகைக் கான ஆணையை தேனி எம்.பி.தங்க தமிழ்ச்செல்வன் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு வழங்க முற்பட்டபோது அந்த ஆணையினை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் எம்.பி.கையில் இருந்து பறித்து இது நான் வாங்கி கொடுத்தது, நான் தான் கொடுப்பேன் என பொதுமக்கள் முன்னிலையில் பறித்து பயனாளிக்கு கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ மகாராஜனை பார்த்து "போடா முட்டா பயலே"என்று கலெக்டர் முன்னிலையிலேயே பகிரங்கமாக கூறினார்.
தனது தொகுதியில், தொகுதி மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக மேடையிலேயே கூறியதால் அதிர்ச்சி அடைந்த எம்எல்ஏ மகாராஜன் "யாரைப் பார்த்து டா முட்டாப் பயலே சொல்ற" ராஸ்கல் தொலைச்சிருவேண்டா"என்று தங்கதமிழ்செல்வனை பார்த்து சீறினார்.பெண்கள் குழாயடி சண்டை போடுவதைப் போல திமுக எம்.பி.யும், திமுக எம்எல்ஏவும் சண்டையிடுவதை பார்த்த கலெக்டர் ரஞ்ஜீத்சிங் பதறிப்போனார்.உடனடியாக சுதாரித்த செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி நன்றி உரை கூறி வேகமாக நிகழ்ச்சியை முடித்து வையுங்கள் என்று தெரிவித்து அவசர அவசரமாக முடித்து வைத்தனர்.
திமுக எம்எல்ஏ யும் பொதுமக்கள் முன்னிலையில் "போடா வாடா" சண்டையில் ஈடுபட்டதால் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. அரசு நிகழ்ச்சியில் பொதுமக்கள் முன்னிலையில் மக்கள் பிரதிநிதிகள் என்பதையும் மறந்து சண்டையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.