- Home
- Tamil Nadu News
- நிலம் வாங்க 5 லட்சம் ரூபாய், பத்திர பதிவு இலவசம்- அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு- உடனே விண்ணப்பிக்க அழைப்பு
நிலம் வாங்க 5 லட்சம் ரூபாய், பத்திர பதிவு இலவசம்- அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு- உடனே விண்ணப்பிக்க அழைப்பு
நிலம் இல்லாதவர்கள் நிலம் வாங்கிடும் வகையில் 5 லட்சம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் படி தகுதியுள்ளவர்கள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Land purchase subsidy : தமிழக அரசு சார்பாக ஏழை எளிய மக்கள், மகளிர், ஆதிதிராவிடர்கள் என பலருக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் மகளிர் முன்னேற்றத்திற்காக மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையானது வழங்கப்பட்டு வருகிறது. மேலும் உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் புதுமைப்பெண் திட்டத்தில் வழங்கப்படுகிறது.
மேலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி என பல ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விவசாய திட்டங்களுக்கு கடன் உதவி, மானியம் உள்ளிட்டவைகள் நடைமுறைப்படுத்தப்படுகிறது
ஆதிதிராவிடர்களுக்கு நிலம் வாங்க மானியம்
இந்த நிலையில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு உதவிடும் வகையில் கடனுதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் கடனுதவி வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தின் கீழ், 50 சதவீத மானியத்துடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
பத்திர பதிவு கட்டணம் இலவசம்
நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள் நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் அல்லது 50% மானியமாக வழங்கப்படும் எனவும், இத்திட்டத்தில் பத்திரப்பதிவு செய்யப்படும் நிலங்களுக்கு 100 சதவீத முத்திரைத்தாள், பதிவுக்கட்டணம் இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியில் 6% வட்டியில் கடன் பெறலாம் எனவும் மேலும் விவரங்களுக்கு அந்தந்த மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகி விவரம் பெறலாம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புபவர்கள் விண்ணப்பங்களை தாட்கோ இணையதளம் www.tahdco.com பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள் என்ன.?
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பதாரர் விவசாயத்தை தொழிலாக கொண்டவராக இருக்க வேண்டும்.
18 வயது முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விவசாய கூலி வேலை செய்பவராகவும் இருக்கலாம்.
மகளிர் இல்லாத குடும்பங்களில் கணவர் அல்லது மகன்களுக்கு வழங்கப்படும்.
விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தில் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்கக்கூடாது.
ஒருவர் ஒருமுறை மட்டுமே மானியம் பெற தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.